Last Updated:
எனக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம். இங்கு சிவப்பு வண்ண ஜெர்சியுடன் 7 ஆண்டுகளாக விளையாடினேன். இன்றைக்கு என்னுடைய ஜெர்சி கலர் வேறு மாதிரியாக உள்ளது – சிராஜ்
தன்னை தக்க வைக்காத ஆர்.சி.பி. அணிக்கு தான் யார் என்பதை முகமது சிராஜ் காட்டிவிட்டார் என வீரேந்தர் சேவாக் கிண்டலாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணியில் முகமது சிராஜ் இடம் பெற்று இருந்தார். இருப்பினும் அவரை நடப்பு சீசனுக்காக ஆர்.சி.பி. அணி தக்கவைத்துக் கொள்ளாமல் விடுவித்தது.
விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கும், ரஜத் படிதார் 11 கோடி ரூபாய்க்கும், யஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் ஆர்.சி.பி. அணியால் தக்கவைக்கப்பட்டனர். முன்னதாக அவரை ஆர்.சி.பி. அணி 7 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது. திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரை இந்த முறை ஆர்.சி.பி. அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இருப்பினும் ஏலத்தில் களமிறங்கிய முகமது சிராஜை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் 12 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து அணியில் எடுத்துக் கொண்டது. இந்நிலையில் தனது பழைய அணிக்கு எதிராக நேற்று அற்புதமாக பந்து வீசிய முகமது சிராஜ், ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட், தேவதத் படிக்கல் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதில் வெற்றி இலக்கை குஜராத் அணி 18 ஓவர்களுக்குள்ளாகவே எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மேட்ச் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கூறியதாவது, “முதல் 3 ஓவர்களில் சிராஜ் 12 அல்லது 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக அவர் இன்னொரு ஓவரை வீசி இருந்தால் இன்னொரு விக்கெட்டை கூட அவரால் எடுத்திருக்க முடியும். நேற்று அவரது ஆட்டம் நெருப்பாக இருந்தது. அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது.
சிராஜை ஆர்.சி.பி அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. அந்த அணிக்கு தான் யார் என்பதை சிராஜ் காட்டிவிட்டார். இதே வேகத்துடன் இன்னும் பல விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு சிராஜ் திரும்புவார் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் சிராஜ் கூறியதாவது “எனக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம். இங்கு சிவப்பு வண்ண ஜெர்சியுடன் 7 ஆண்டுகளாக விளையாடினேன். இன்றைக்கு என்னுடைய ஜெர்சி கலர் வேறு மாதிரியாக உள்ளது. முதலில் விளையாடும் போது ஒரு விதமான நடுக்கத்துடன் தான் இருந்தேன்.
ஆனால் பந்து எனது கைக்கு வந்ததும் முழு திறமையை வெளிப்படுத்த தொடங்கினேன். ஓய்வு நேரத்தில் என்னுடைய பந்துவீச்சு, என்னுடைய உடல் பிட்னஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். குஜராத் அணியில் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா கொடுத்த ஆலோசனைகள் எனக்கு பலன் அளித்தன” என்று தெரிவித்தார்.
April 03, 2025 6:25 PM IST