ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு, பினிசிங் சரி இல்லியப்பா என்ற வடிவேலு காமெடிக்கு ஏற்ப கடந்த 11 ஆண்டுகளில் 9 முறை ஐசிசி போட்டிகளின் அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் சர்வதேச கிரிக்கெட் சங்கம் 20 ஓவர், 50 ஓவர், சாம்பியன்ஷிப் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை நடத்தி வருகிறது.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்டபோது, இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி வாகை சூடியது. அதையடுத்து 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. பின்னர் 2013ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரிலும் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த 3 கோப்பைகளையும், பெற்றுத் தந்தவர் தல மகேந்திர சிங் தோனி.
அதன்பின் தற்போது வரை இந்திய அணிக்கு ஐசிசி கோப்பை என்பது கனவாகவே உள்ளது. டி20 உலகக் கோப்பைகளை பொறுத்தவரையில் 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக தோல்வியடைந்த இந்தியா, 2016, 2022 ஆம் ஆண்டுகளில் அரையிறுதியுடன் நடையை கட்டியது.
இதையும் படிக்க:
ஆனந்த கண்ணீர் வடித்த ரோகித் சர்மா… தட்டிக் கொடுத்து கொண்டாடிய விராட் கோலி!
50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில் 2015, 2019 ஆம் ஆண்டுகளில் அரையிறுதியிலும், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.
இதனிடையே 2017ல் நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது இந்தியா. இவைகள் தவிர்த்து, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை இறுதிபோட்டிக்கு முன்னேறிய நிலையிலும் கோப்பை வசப்படவில்லை.
2013ல் தோனி சாம்பியன்ஷிப் டிராபியை பெற்று தந்த பிறகு, இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை. இந்நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பையாவது இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
