Business
oi-Velmurugan P
மும்பை: பொதுவாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தாங்கள் வழங்கிய கடனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு அதிகாரித்துள்ளது. ஆப் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால், இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆட்களை அனுப்பவுது போன்ற செயல்களை செய்வதாக வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கிக்கு புகார் அளித்தனர். இது ஒருபுறம் எனில் கடன் வசூலிப்பில் கடுமையாக நடந்து கொண்டதால் ஏராளமானோர் விபரீத முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து கடனை வசூலிக்க நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
நீங்கள் ஒரு மாதம் இஎம்ஐயை சில நாட்கள் தாமதமாகச் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில மணிநேரங்களிலேயே, ஒரு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கும்… பின்னர் உங்கள் குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தி வேலை செய்பவர்களுக்கும் அழைப்புகள் சென்றுவிடும் யாரோ ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து, தங்கள் அடையாள அட்டையைக் காட்ட மறுப்பதோடு, நீங்கள் கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என்பதை உங்கள் அண்டை வீட்டாரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டுவார்.

பல ஆண்டுகளாக, ஏராளமான இந்தியக் கடன் வாங்குபவர்கள் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது இத்தகைய சூழலையே எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் வங்கிக் கடனைத் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வருகின்றன.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் பற்றி பார்ப்போம்..
கடனைத் திரும்பப் பெறுவது கடனாளியின் கண்ணியம், அந்தரங்கம் மற்றும் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கடன் வசூலிக்கும் முகவர்கள் செய்யக்கூடாத செயல்கள்
கடன் வசூலிக்கும் முகவர்களோ அல்லது வங்கி ஊழியர்களோ கடனாளிகளிடம் கடுமையான அல்லது கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. முக்கியமாகப் பின்வருவனவற்றைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
பயமுறுத்துவது, மிரட்டுவது அல்லது ஆபாசமான மொழிகளைப் பயன்படுத்துவது.
சமூக ஊடகங்களில் கடனாளியின் வீடியோ, ஆடியோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடுவது.
போன் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பொருத்தமற்ற மெசேஜ்களை அனுப்புவது (பல நிறுவனங்கள் கடன் வாங்கிவிட்டு கட்ட மறுப்பதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புகின்றன).
பெயர் குறிப்பிடாமல் போன் செய்து மிரட்டுவது.
கடனாளியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் உள்ள சக ஊழியர்களைத் தொடர்புகொண்டு கடனை திரும்பி செலுத்துமாறு தொல்லை தருவது அல்லது மிரட்டுவது.
கடனாளியைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது.
தவறான அல்லது வழிகெடுக்கும் தகவல்களைக் கூறி பயமுறுத்துவது போன்ற செயல்களை ஒரு போதும் இனி செய்யக்கூடாது.
தொடர்பு கொள்ள குறிப்பிட்ட நேரம்
முகவர்கள் கடனாளிகளைத் தொடர்புகொள்ள அல்லது நேரில் சந்திக்க காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.
கடனாளி நேரடியாகக் கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த நேரத்தைத் தாண்டித் தொடர்பு கொள்ள முடியும்.
குடும்பத்தில் இறப்பு , மருத்துவ அவசரநிலை, திருமணம் போன்ற துயரமான அல்லது முக்கியமான நிகழ்வுகளின் போது கடனாளிகளைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சந்திக்கும் இடம் மற்றும் முன்அறிவிப்பு
கடனாளி விரும்பும் இடத்தில்தான் முகவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும். கடனாளி தொடர்ந்து இரண்டு முறை வரத் தவறினால் மட்டுமே அவரது வீடு அல்லது அலுவலகத்திற்குச் செல்ல முடியும்.
ஒரு முகவர் நேரில் வருவதற்கு குறைந்தது 1 நாட்களுக்கு முன்பாக வங்கி கடனாளிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நேரில் வரும் முகவர் கண்டிப்பாகத் தனது அடையாள அட்டையையும் , வங்கியின் அனுமதித் கடிதத்தையும் வைத்திருக்க வேண்டும்.
வங்கிகளுக்கான முக்கியப் பொறுப்புகள்
பொறுப்பு விலக முடியாது: கடன் வசூலிப்பதை வெளிமுகவர்களிடம் ஒப்படைத்தாலும், அவர்களின் நடத்தைக்கு வங்கியே முழுப் பொறுப்பாகும்.
அழைப்புகள் பதிவு செய்யப்படும்: கடன் வசூல் தொடர்பாகப் பேசப்படும் அனைத்து போன் அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குப் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
சம்பள இலக்குகள் : வன்முறையைத் தூண்டும் வகையில் முகவர்களுக்குக் கடுமையான டார்கெட்களையோ அல்லது ஊக்கத்தொகை திட்டங்களையோ வங்கிகள் அமைக்கக் கூடாது.
சான்றிதழ் பெற்ற முகவர்கள்: IIBF (Indian Institute of Banking and Finance) மூலம் பயிற்சி பெற்ற முகவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
நஷ்டஈடு மற்றும் புகார் அளிக்கும் வசதி
நஷ்டஈடு : வங்கியோ அல்லது முகவரோ இந்த விதிகளை மீறி கடனாளியைத் துன்புறுத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வங்கியிடம் இருந்து கடனாளி நஷ்டஈடு பெற உரிமை உண்டு.
புகார் அளிக்கும் மையம்: கடன் ஒப்பந்தத்திலேயே புகார் அதிகாரியின் பெயர், போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு, முறையற்ற கடன் வசூல் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்டுள்ளது.



