1979 முதல் 1989 வரை நடந்த ஆப்கானிஸ்தான் போர், புவியரசியலில் தொடா்ந்தும் பேசப்படும் போராக இருக்கிறது. உலக அதிகாரத்தை தம் கையில் வைத்திருப்பதற்காக அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் பனிப்போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது.
அந்த பனிப்போருக்கு ஆப்கான் மண்ணில் தான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆப்கானில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவுடன் தொடுத்த இந்தப் போரில் அமொரிக்காவின் பினாமியாக பாகிஸ்தான் செயற்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு இந்த போர் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது.
இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக பாகிஸ்தான் பார்க்கப்படுவதற்கு இந்த ஆப்கான் போரே அடிப்படையானது. 1979களில் அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக சேர்ந்து இந்த போருக்கான வியூகத்தை வகுத்தன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் யூனியனுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி விடுவதற்கு அமொரிக்கா வியூகம் வகுத்தது. அமொரிக்காவும், சவுதி அரேபியாவும் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு நிதியும், பயிற்சியும், ஆயுதமும் வழங்கி ஆசிர்வாதமும் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த போரின் போது, மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் தஞ்சம் தேடி பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர். அகதிகளின் இந்த பாரிய வருகை பாகிஸ்தானின் சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. இதன்காரணமாக பாகிஸ்தானுக்கு எதிர்மறையான பல விளைவுகளையும் சந்திக்க நேர்ந்தது.
போரின் விளைவாக சுமார் மூன்று மில்லியன் (3,000,000) ஆப்கானியர்கள் மாண்டு போயினர், அதே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறினர். பெரும்பாலான ஆப்கானியர்கள் பாகிஸ்தானிலும் ஈரானிலும் தஞ்சம் புகுந்தனர். இவ்வளவு உயிர், உடமை இழப்புகளும் அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவே அரங்கேற்றப்பட்டன.
இன்று உலகம் முழுவதும் வியாபித்து, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதம் என்ற ஒற்றைச் சொல்லை பிரசவித்து பெற்றுக் கொடுத்த பெருமை அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கே சேரும். தீவிரவாதத்தைப் பற்றி சாரியாக புரிவதற்கும், அதற்கு முகம் கொடுப்பதற்கும், எமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் முன்வைக்கும் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்த வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய போராளிகளின் கூடாரமாக இருந்தது. அமெரிக்கா கம்யூனிஸத்திற்கு எதிரான புனிதப் போரின் கொள்கைக் கூடாரமாக பாகிஸ்தானை உருமாற்றியது. ரஷ்யாவுக்கு எதிராக போராடுவதற்கு பன்னாட்டு போராளிகள் அணியணியாக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டார்கள். இன்று உலக அமைதிக்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் கருதப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அரிச்சுவடி சொல்லுக் கொடுத்ததே அமெரிக்கா தான். சவுதி அரேபியா தனது ஏஜன்ட்களை வைத்து சோ்த்துக் கொடுத்த மாணவா்களை வைத்து ஆப்கானில் அந்த போர் பாடம் கற்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நேரடி கண்காணிப்பிலும், சவுதி அரேபியாவின் பெட்ரோ டொலா் நிதியுதவியினாலும் பல்வேறு போராளிக் குழுக்கள் பாகிஸ்தானில் வளா்த்தெடுக்கப்பட்டன. இவா்களுக்கு சவுதி அரேபியா தீவிரவாதப் பாலை ஊட்ட அமெரிக்க போர்ப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கியது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இந்த மூல ஊற்றிலிருந்தே தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாத கும்பல்கள் தோற்றம் பெற்றன.
ஆப்கானிஸ்தான் போர், பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலக அரசியலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் எல்லைகளுக்குள்ளும், பிராந்தியத்திலும், உலகின் பல்வேறு இடங்களிலும் தீவிரவாதம் பெருகுவதற்கு மிகப்பெரும் பங்களிப்பை இந்தப் போர் வழங்கியது எனலாம்.
ஆப்கான் போரின் விளைவுகள், பாகிஸ்தானின் பொருளாதாரத்தையும், ஜனநாயகத்தையும் சமூக கட்டமைப்பையும் பலமாக பாதித்தன. தீவிரவாதக் கூறுகள் மற்றும் தீவிர சித்தாந்தங்கள் இன்றும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருந்து வருவதன் காரணமாக, அந்த நாடு தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தள்ளாடி நிற்கிறது.
தீவிரவாதத்தை போதித்து சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக மக்களை அணி திரட்டும் பணியில் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ அன்று மிகவும் திட்டமிட்டு செயற்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலிருந்து இளைஞர்கள் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, சோவியத் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் அணி திரட்டப்பட்டனர்.
பிற்காலத்தில் யுத்தம் நிறைவுற்று அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியபோது, இந்த தீவிரவாத சிந்தனைகளை சுமந்துக் கொண்டே தமது சொந்த நாட்டுக்கு செல்லலாயினா். ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் தீவிரவாத சிந்தனை பரவுவதற்கு இதுவே காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது..
பாகிஸ்தானின் சமூக-பொருளாதார நிலைமைகள், பரவலான வறுமை மற்றும் கல்விக்கான வாய்ப்புகளில் உள்ள தடைகள் ஆகியவை, அந்நாட்டில் தீவிரவாத சித்தாந்தங்கள் வேரூன்றுவதற்கு ஒரு வளமான நிலத்தை அவா்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.
இந்த போரின்போது பாகிஸ்தானுக்குள் ஏராளமான போராளிக் குழுக்கள் தோன்றி வலுப்பெற்றன. பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அரவணைப்பைப் பெற்ற தீவிரவாதக் குழுக்களை பிற்காலத்தில், தனது சொந்த நலனுக்காக பயன்படுத்த பாகிஸ்தான் முனைந்தாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.. இதன்காரணமாக பிராந்தியத்தில் எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் ஆரம்பமாதெனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் மோசமாக இடம்பெற்றன. ஆப்கான் போருக்கு பின்னரே இந்த தீவிரவாத கும்பல்களின் செயற்பாடு அதிகரித்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாத குழுக்கள் தாக்குதல்களை நடாத்தின. ஆப்கான் களத்தில் பயிற்சி பெற்ற லஷ்கா் இ தொய்பா 2008 இல் மும்பையில் தாக்குதலில் தொடா்புபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
பனிப்போரின் பின்னணியில் வடிவமைக்கப்பட்ட, புவிசார் அரசியல் உத்திகளால் பின்னப்பட்ட ஆப்கான் போரினால் அமெரிக்காவே ஆதாயம் அடைந்தது. ஆப்கான் யுத்தம் பல மில்லியன் உயிர்களைக் காவு கொண்டு விட்டு, தீவிரவாதம் என்ற ஒரு பெருந் தீயை மூட்டி விட்டு சென்றிருக்கிறது.
இன்று பாகிஸ்தானை மட்டுமல்ல உலகின் பல பாகங்களில் வாழும் மனிதத்தை அந்த தீவிரவாத தீ தின்றுக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
யாத்ரா

