Last Updated:
சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் இருந்து ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பதிவுகளை உடனடியாக நீக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, 50 லட்சத்திற்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட சமூக ஊடகங்கள், ஆபாச காட்சிகள் மற்றும் பதிவுகளை தானாகவே கண்டறிந்து நீக்கம் செய்யும் தொழில்நுட்ப வசதிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் குழந்தைகளை அநாகரிகமாக சித்தரிக்கும் ஆபாச பதிவுகளை எந்த விதத்திலும் சமூக ஊடகங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆபாச பதிவுகள் குறித்து சமூக ஊடக பயனர்கள் புகார் அளித்தால், 24 மணிநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் மத்திய அரசு தனது வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், விதிகளை முறையாக பின்பற்றாத 25 உள்ளூர் ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, ஐடி சட்டம் 2021-ஐ முறையாக பின்பற்றாத சமூக ஊடகங்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.


