Last Updated:
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட 36 விமானப்படை வீரர்களுக்கு மத்திய அரசு வீரதீர விருதுகளை அறிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய விமானப்படையைச் சேர்ந்த 36 வீரர்களுக்கு நாட்டின் வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா சில ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், இந்தியா மீது பாகிஸ்தான் சில ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்பிறகு மே 7ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதனையடுத்து, இந்திய எல்லை கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், நடந்துவரும் மழைக்கால கூட்டத்தொடரில் தான் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. இதிலும், பல கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க ஆபரேஷன் மகாதேவ் செயல்படுத்தப்பட்டது. இதில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த விமானப்படையைச் சேர்ந்த 36 வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.
அதன்படி, இந்திய விமானப்படையைச் சேர்ந்த 9 வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வீரருக்கு சௌர்ய சக்ரா விருதும், 26 வீரர்களுக்கு வாயு சேனை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
August 14, 2025 7:42 PM IST


