Last Updated:
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மே 7ஆம் தேதி இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தைத் தொடங்கியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்துப் பேசினார். இந்த நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருந்ததால், “இந்தியாவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளிடம் மன்றாடியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஆயுதப் படைகளின் வேகம், தெளிவு பாராட்டத்தக்கது. இவர்களின் பதிலடி அற்புதமானது” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். சமீபத்திய தனது கோவா பயணத்தின்போது ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்த கடற்படை வீரர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “நம்முடைய தாக்குதல் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்ததால், இந்தியாவைத் தடுக்க முழு உலகத்திடமும் பாகிஸ்தான் மன்றாடத் தொடங்கியது” என்றார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மே 7ஆம் தேதி இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து எல்லையைத் தாண்டி துல்லியத் தாக்குதல்களை நடத்தியதைக் குறிப்பிட்டுப் பேசிய ராஜ்நாத் சிங், “தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத முறைகளைக் கூட பயன்படுத்தத் தயங்க மாட்டோம்” என்று கூறி சிங் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பற்றிப் பேசிய ராஜ்நாத் சிங், “குறுகிய காலத்தில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதத் தளங்களையும், அதன் நோக்கங்களையும் நாம் தகர்த்தெறிந்துள்ளோம்” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நேரடித் தாக்குதல்” எனக் குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் தனது நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளையும், அவர்களின் மையங்களையும் வேரோடு பிடுங்குவது பாகிஸ்தானுக்கு நல்லது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தானாக முன்வந்து செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். “ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, அவர்களை வளர்த்துவிடும் மறைமுக சக்திகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை இந்தியா கூறி உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து ஈடுபட்டு வரும் ஆபத்தான பயங்கரவாத விளையாட்டு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அந்நாடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
கடற்படையின் பங்களிப்பிற்குப் பாராட்டு:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய ராஜ்நாத் சிங், இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இந்திய கடற்படையின் பங்கு மகத்தானது என்றார். “இந்திய கடற்படை தனது அமைதியான சேவையால் இந்திய மக்களைக் கவர்ந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் இந்திய கடற்படைக்கு வெற்றி கிட்டியுள்ளது” என்றார்.
பாகிஸ்தான் மண்ணில் புகுந்து தீவிரவாதத் தளங்களை இந்திய விமானப்படை அழித்தபோது, அரேபிய கடலில் இந்திய கடற்படையின் ஆக்ரோஷமான நிலைப்பாடு பாகிஸ்தான் கடற்படையைக் கட்டுக்குள் வைத்திருந்தது. “மொத்தத்தில் நமது ஆயுதப் படைகள் செயல்பட்ட வேகம் மற்றும் காட்டிய தெளிவான செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை” என்றார்.
June 01, 2025 11:25 AM IST
ஆபரேஷன் சிந்தூர்… ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நேரடி தாக்குதல் – ராஜ்நாத் சிங்


