கோலாலம்பூர்:
சமூக ஊடக விளம்பரம் மூலம் ஈர்க்கப்பட்ட கூச்சிங்கைச் சேர்ந்த நபர் ஒருவர், போலியான பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் 411,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்தபோது டிக் டாக் (TikTok) செயலி வழியாக இந்த மோசடி வலையில் விழுந்த அந்தப் பாதிக்கப்பட்ட நபர், மார்ச் 5 முதல் ஏப்ரல் 15 வரை 17 தவணைகளாக மொத்தம் 660,000 ரிங்கிட்டை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
தொடக்கத்தில் 249,000 ரிங்கிட் லாபமாகத் திரும்பக் கிடைத்த நிலையில், மீண்டும் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை வாங்குமாறு மோசடிக்காரர்கள் வற்புறுத்தியபோதே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்ததாகக் கூச்சிங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.
தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள வேளையில், பொதுமக்கள் சமூக ஊடக முதலீட்டுத் திட்டங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகம் இருந்தால் 997 என்ற எண்ணில் தேசிய மோசடி அழைப்பு மையத்தைத் (NSRC) தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




