Last Updated:
ஆனந்த் அம்பானி குஜராத்தின் ஜாம்நகரில் ‘வந்தாரா’ எனும் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.
ஆனந்த அம்பானியின் பிறந்த நாளை முன்னிட்டு யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோவுக்கு பழ விருந்து வைக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநரும், விலங்குகள் நல அமைப்பான ‘வந்தாரா’வின் பொறுப்பாளருமான ஆனந்த் அம்பானி நாளை தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் விருந்து வைத்து ஆனந்த் அம்பானியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள ஹாதி கான் பகுதியில் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. விலங்குகள் நலன் மற்றும் யானைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொண்டாட்டத்தின் மையப்பகுதியாக யானைகளுக்கென பிரத்யேகமாக 3,000 கிலோ எடையுள்ள பழ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், தர்பூசணி, கரும்பு, வெல்லம், பப்பாளி, ஆரஞ்சு மற்றும் பசுந்தீவனங்கள் என யானைகளுக்குப் பிடித்தமான உணவுகள் ஏராளமாக வழங்கப்பட்டன.
பாபு, புஷ்பா மற்றும் சந்தா ஆகிய மூன்று யானைகள் தங்களது தும்பிக்கை மூலம் கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது. யானைகளை இரவு பகலாகப் பராமரிக்கும் பாகன்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்கள், காலணிகள், ஆடைகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. யானைகள் அனைத்தும் பாரம்பரிய ராஜஸ்தானி முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஆனந்த் அம்பானி குஜராத்தின் ஜாம்நகரில் ‘வந்தாரா’ எனும் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், துன்புறுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வனவிலங்கு இனங்களுக்குப் புகலிடமாக உள்ளது.
யானைகள் மீது அவர் கொண்டுள்ள தனிப்பட்ட அக்கறை மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளின் நலனுக்காக அவர் செய்து வரும் நிதி உதவிகளைப் பாராட்டி, ஹாதி கான் விகாஸ் சமிதி இந்த விழாவை நடத்தியது.
Apr 09, 2026 11:16 AM IST


