Last Updated:
தெலங்கானா மாநிலம் நிர்மல் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விஞ்சமூருக்கு தனியார் பேருந்து ஒன்று 41 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து ஒன்று எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோர விபத்துக்கு காரணம் என்ன?
தெலங்கானா மாநிலம் நிர்மல் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விஞ்சமூருக்கு தனியார் பேருந்து ஒன்று 41 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. படுக்கை வசதிகளுடன் கூடிய அந்தப் பேருந்தில், பயணிகள் அனைவரும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 6 மணியளவில் பேருந்து ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், மார்க்கபுரம் வட்டாரத்தில் உள்ள ராயவரம் அருகே சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த அசம்பாவித சம்பவம் அரங்கேறியது.
சாலையின் எதிர்ப்புறமாக கனிகிரியிலிருந்து சரளைக் கற்களை லோடு ஏற்றிக் கொண்டு, டிப்பர் லாரி ஒன்று தறிகெட்ட வேகத்தில் வந்து கொண்டிருந்தது. எதிரெதிரே வந்த இரு வாகனங்களும், ஒரு வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் பேருந்தின் எரிபொருள் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது. பேருந்து கொளுந்துவிட்டு எரிந்ததில் தீ மளமளவென பரவியது. பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி விட்டது. கிடைத்த சொற்ப நேரத்திற்குள் அனைவராலும் பாதுகாப்பாக வெளியேற முடியவில்லை.
இந்த கோர விபத்தில் தீயில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டனர். 20க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மார்க்கபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் ஓபுலா ரெட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே கடும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் சிலர் பலியானதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியும், ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


