ஆதார் கார்டில் எத்தனை முறை நம் முகவரியை மாற்றலாம்? UIDAI விதிகள் சொல்வது என்ன?
இந்தியர்களின் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டில் நம் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. அப்போது தான் நம் மற்ற ஆவணங்களில் விவரங்களை அப்டேட் செய்து அரசின் நலத்திட்டங்களை பெற முடியும்.
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை ஒரு நபர் தன் வாழ்நாளில் எத்தனை முறை அப்டேட் செய்யலாம் என்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI குறிப்பிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

UIDAI விதிமுறைப்படி, ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அடிக்கடி இடம் பெயருபவர்கள், வேலை அல்லது படிப்புக்காக வேறு நகரங்களுக்கு செல்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ‘myAadhaar’ தளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனிலும் அல்லது ஆதார் சேவை மையங்களுக்குச் சென்றும் மாற்றலாம்.
அதேபோல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இருப்பினும், மொபைல் எண்ணை மாற்ற, பயோமெட்ரிக் சரிபார்ப்புக்காக அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும். வங்கி சேவைகள் மற்றும் அரசு திட்டங்களின் அடையாள சரிபார்ப்பிற்கு ஓடிபி வரும் என்பதால் மொபைல் எண் அப்டேட்டாக இருப்பது மிக முக்கியம்.
அதே போல ஆதார் கார்டில் ஒருவர் தனது வாழ்நாளில் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். இதில் பெயர் மாற்றம் மற்றும் எழுத்து பிழை திருத்தங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். பிறந்த தேதி மற்றும் பாலினம் வழக்கமாக ஒருமுறை மட்டுமே மாற்ற அனுமதிக்கப்படுகின்றன. எனவே, இந்த தகவல்களை புதுப்பிக்கும் போது, ஆவணங்களை சரியாக சரிபார்த்து கவனமாக விண்ணப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது. தவறான தகவல்களை பதிவு செய்வது பின்னாளில் பாஸ்போர்ட், வங்கி மற்றும் அரசு பணிகளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
தற்போது ஆதார் சேவை மையங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை அப்டேட் செய்ய 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கைரேகை, கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க 125 ரூபாய் கட்டணமாகும்.
குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு UIDAI கட்டணம் வசூல் செய்வது இல்லை. மக்கள் myAadhaar இணையதளம் வழியாக ஆன்லைனில் ஆவணங்களை அப்டேட் செய்யும் வசதியை அடுத்த ஆண்டு ஜூன் வரை இலவசமாக பெறலாம். ஆதார் அப்டேட் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்கமாக 30 நாட்களுக்குள் அவை அப்டேட் ஆகிவிடும்.
ஆதார் அட்டையில் தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே பிஎஃப் கணக்கு பராமரிப்பு, வங்கி பரிவர்த்தனைகள், மானியங்கள் பெறுதல் மற்றும் e-KYC சரிபார்ப்புகளில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எனவே, உங்கள் ஆதார் தகவல்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது.

