Tamilnadu
oi-Halley Karthik
தென்காசி: பாவூர்சத்திரம் பகுதியில், தனது மகளை திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் தந்தை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து விசிக வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஆட்சி அதிகாரத்தில் அக்கட்சி பங்கெடுத்திருந்தும், ஏன் இன்னும் சிறப்பு சட்டத்தை இயற்றாமல் இருக்கிறது? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (22), இவர் இதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா(20) என்கிற இளம்பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து வந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால், இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், எதிர்ப்பை மீறி இந்த ஜோடி திருமணம் செய்துக்கொண்டது. இவர்கள் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள சிவகாமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருந்தனர். ஆகாஷ் பக்கத்தில் இருக்கும் நெல்லிக்காய் தோட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், சுஷ்மிதாவின் தந்தை முருகன் (52) உள்ளே என்ட்ரி ஆகிறார்.
தொடக்கத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் பழைய பகையை மறந்துவிட்டதை போல அடிக்கடி மகளின் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து தருவது, அடிக்கடி வந்து நலம் விசாரிப்பது என்று இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில் கடந்த வியாழக்கிழமை (செப்.10) இரவு வேலை முடித்துவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக ஆகாஷை தாக்கியிருக்கிறார்.
தற்போது ஆகாஷ் தென்காசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆணவக்கொலைக்கான சிறப்பு சட்டம்
தென்மாவட்டங்களில் ஆணவக்கொலை என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. இதை தடுக்க தனி சிறப்பு சட்டம் வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் கடந்த காலங்களில் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தன. இப்போது ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கெடுத்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இன்னும் ஆணவக்கொலக்கான தனி சிறப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் வன்னிஅரசு, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்று பரவலாக கேள்வி எழுந்திருக்கிறது.

