Last Updated:
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தி பரவசம் நிலவி வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் தினசரி மலர் சந்தையில் இன்று பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், அம்மன் வழிபாட்டிற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள், சிறப்பு அபிஷேகங்கள், கூழ்வார்த்தல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் களைகட்டுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், துர்க்கையம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி, விழுப்புரம் நகரின் பல்வேறு ஆலயங்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதனால் வீடுகள் மற்றும் கோவில்களில் வழிபாடு நடத்துவதற்காக பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் இன்று அதிகாலை முதலே மலர் சந்தையில் திரண்டனர்.
தேவை அதிகரித்ததன் காரணமாக பூக்களின் விலையும் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான குண்டு மல்லிகை இன்று ரூ.600-க்கும், ரூ.400-க்கு விற்பனையான அரும்பு ரூ.500-க்கும், ரூ.240-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.300-க்கும் விற்பனையாகிறது. மேலும், ரூ.600-க்கு விற்பனையான ஜாதி மல்லி இன்று ரூ.850-க்கும், சாமந்திப்பூ கிலோ ரூ.500-க்கும், பன்னீர் ரோஜா ரூ.250-க்கும், ரூ.140-க்கு விற்பனையான சம்மங்கி ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூ மாலைகளின் விலையும் ரூ.300 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மலர் வியாபாரிகள் கூறுகையில், “ஆடி மாதத்தில் பூக்களின் தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். தற்போது வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சாமந்தி, குண்டு மல்லி மற்றும் முல்லைப்பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விலை உயர்ந்திருந்தாலும் பக்தர்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்,” என்றனர்.
