
Last Updated:
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வினோத் காம்ப்ளியின் வீடியோ தன்னை உணர்ச்சிவசப்படவைத்தது என்கிறார். மேலும் சக வீரர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் வீடியோ தன்னை உணர்ச்சிவசப்படவைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தானே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். முன்னதாக, தனது சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவுத் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது வினோத் காம்ப்ளி கிட்டத்தட்ட எழுந்து நிற்கக்கூட சிரமப்பட்டார். இந்த வீடியோ விளையாட்டு உலகை அதிரவைத்தது.
இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வினோத் காம்ப்ளியின் வீடியோ தன்னை உணர்ச்சிவசப்படவைத்தது என்கிறார். மேலும் சக வீரர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
அதில், “வினோத் காம்ப்ளியின் வீடியோவைப் பார்த்தேன். அது என்னை உணர்ச்சிவசப்படவைத்தது. வீரர்கள் தங்கள் பணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது முக்கியம். எதிர்காலத்தில் உங்களுக்குப் பயன்படும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். என் கணவர் என் முதலீடுகளை கவனித்துக்கொள்கிறார். நான் இதுவரை எந்த நிதி நெருக்கடியையும் சந்திக்கவில்லை.
வினோத் காம்ப்ளிக்கு நடந்தது போன்று அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விஷயங்களை கவனமாக செய்ய வேண்டும். உங்களை சரியான வழியில் வழிநடத்தக்கூடியவர்கள் உங்களுடன் இருக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 14, 2025 2:25 PM IST

