Last Updated:
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க உள்ளது.
துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஆசிய கோப்பையை வெல்லும் அணிக்கு நடப்பாண்டு இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த பரிசுத்தொகையை விட 10 மடங்கு அதிகமான பரிசுத்தொகையை இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 21 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இந்த தொடரின் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 13 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, அதற்கான கோப்பை மற்றும் எஸ்யுவி வாகனம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அதிக விக்கெட் எடுத்ததற்கும், மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதுக்காகவும் குல்தீப் யாதவுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் இறுதிப்போட்டிக்கான தனது ஊதியத்தை முழுமையாக ராணுவ வீரர்கள் மற்றும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
September 29, 2025 2:55 PM IST


