Last Updated:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில், ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் உறுப்பினருமான முகமது அசாருதீன், இரு தரப்பு போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடாத பட்சத்தில் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் ஏன் இருநாடுகளும் மோத வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, மாநிலங்களவை எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பாகிஸ்தான் விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் பாஜக இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை பிசிசிஐ மவுனம் காத்து வருகிறது. முன்னதாக உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தை இந்திய சீனியர் வீரர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
8 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று போட்டி தொடர் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற்றம் அடையும்.
July 27, 2025 9:33 PM IST


