பெய்ஜிங்:
2025ஆம் ஆண்டில் ஆசியானுக்கு மலேசியா தலைமை தாங்கவுள்ள நிலையில், பிரதமர் அன்வார் இப்ராகிம் சீனாவுக்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆசியான் நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், நீடித்த நிலைத்தன்மை எனும் கருப்பொருளுடன் பொருளாதார நிலை பேதமின்றி அனைத்து ஆசியான் நாடுகளும் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றால் கிடைக்கும் பலனை அனுபவிக்க வேண்டும் என்றார் அவர்.
671 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வட்டாரமாக ஆசியான் வளர்ந்திருப்பதைப் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
ஆசியானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்றும் இதுவே உலகிலேயே ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியல் என்றும் அவர் கூறினார்.
“உலகளாவிய சூழல் எதிர்நோக்கும் சவால்கள் காரணமாக ஆசியான் புதிய பொறுப்புகள், பங்களிப்புகளை ஏற்க வேண்டி இருக்கிறது,” என்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பேசியபோது அவர் தெரிவித்தார்.
ஆசியானின் மையத்தன்மையை மலேசியா பாதுகாத்து நிலைநாட்டும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.


