கோலாலம்பூர்:
47வது ஆசியான் உச்சி மாநாட்டிற்கான அனைத்துலக தூதுக்குழுவை அழைத்துச் சென்ற வாகனத் தொடரணியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் 1.10 மணியளவில், எலைட் நெடுஞ்சாலையின் வடக்கு திசையில், டெங்கில் R&R வெளியேறும் பகுதியில் (KM22.3) நிகழ்ந்தது என்று , புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்தார்.
அதிகாரி வாகனத் தொடரணிக்கு துணைபுரியும் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு நான்கு சக்கர வாகனம் (4WD) மோதி விபத்து ஏற்பட்டது என்றார்.
அதில், காவசாகி GTR மோட்டார் சைக்கிளில் சென்ற 35 வயது கார்போரல் இடது கால் முறிவு மற்றும் கணுக்கால், முழங்காலில் காயம் அடைந்ததாகவும், அவர் உடனடியாக சைபர்ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு, சாலை போக்குவரத்து சட்டம் 1987 (பிரிவு 43(1)) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஆசியான் உச்சநிலை மாநாட்டு நாட்களில் சாலையில் போலீஸ் வாகனத் தொடரணிகள் செல்வதால், பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் மற்றும் ஒத்துழைப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேநேரத்தில், நெடுஞ்சாலையின் இடது பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அதிகாரியை 4WD மோதி விபத்து ஏற்படும் காட்சி கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது .




