இவ்வாறான எந்தவொரு பணக் கோரிக்கையையும் நலன்புரி நன்மைகள் சபை விடுத்ததில்லை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும் என்றும் சபை தெளிவுபடுத்தியுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவிகளைப் பெறும் பயனாளர்களை இலக்காகக் கொண்டு, தொலைபேசி ஊடாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அஸ்வெசும பயனாளர்களை வெவ்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் சிலர், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் முதன்மை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, தரவுகளைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது கணக்கை செயல்படுத்த வேண்டும் எனக் கூறி பணம் செலுத்துமாறு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான எந்தவொரு பணக் கோரிக்கையையும் நலன்புரி நன்மைகள் சபை விடுத்ததில்லை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும் என்றும் சபை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து இவ்வாறான அழைப்புகள் வந்தால், எந்தவிதப் பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது பணக் கோரிக்கைகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறும், நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் அஸ்வெசும திட்டத்துக்காக யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்பதுடன், இந்த எச்சரிக்கையை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

