
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை இந்த ஏப்ரல் மாதத்திற்காக மாத்திரம் விசேடமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுமக்களின் தற்போதைய வாழ்வாதாரச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு இந்த விசேட நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பல இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, இதுவரை 17,500 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த அதிகூடிய கொடுப்பனவுத் தொகை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10,000 ரூபாயினைப் பெற்று வந்த பயனாளர்களுக்கு இனி 15,000 ரூபாயும், 5,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்று வந்தவர்களுக்கு 7,500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திடீர் உயர்வு காரணமாக அஸ்வெசும திட்டத்தின் கீழ் உதவி பெறும் அனைத்துக் குடும்பங்களும் கணிசமான மேலதிகத் தொகையை இந்த மாதம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விசேட நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, அரசாங்கம் இந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், நலிவடைந்த நிலையில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனினும், இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பானது ஏப்ரல் மாதத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதையும் ஜனாதிபதி தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

