Sports
oi-Shyamsundar I
லண்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்த நிலையில், அர்ஜென்டினா அதிபர் ஜெவியர் மிலே செய்த போஸ்ட் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் ஃபெரான் டோரஸ் அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அதிபரின் பதிவு
போட்டி முடிந்த சில நிமிடங்களில் அர்ஜென்டினா அதிபர் ஜெவியர் மிலே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “உலக அளவில் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அர்ஜென்டினா அணியின் சாதனையை கொண்டாடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள மக்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். எனவே, வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் விரும்பும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்நாள் தேசிய பொது விடுமுறையாக அறிவிக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா தோற்ற நிலையில், அதிபர் மிலே கொண்டாட்டத்திற்காக விடுமுறையை அறிவித்தது அந்நாட்டு ரசிகர்களிடையேயும் உலக அளவிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
நெட்டிசன்களின் கடுமையான ட்ரோல்கள்
அதிபரின் இந்த பதிவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்யத் தொடங்கினர். அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என்று கணித்து, அவர் முன்னதாகவே இந்த பதிவை Schedule செய்து வைத்திருந்ததாகவும், அணி தோற்ற பிறகு அதை நீக்க மறந்துவிட்டதாகவும் பலரும் குற்றம் சாட்டினர்.
இன்னும் சிலர்.. எப்படியாவது அர்ஜென்டினாவை வெல்ல வைத்துவிடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்.. அதாவது சர்வதேச அளவில் சதி செய்து வெற்றிபெறலாம் என்று நினைத்திருப்பார்.. அதனால் அவர் முன்னதாகவே இந்த பதிவை Scheduled செய்து வைத்திருக்கலாம்.. ஆனால் அதை பின்னர் நீக்க மறந்துவிட்டார் என்றும் நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
பொதுவாக எந்தவொரு தொடரிலும் ரன்னர்-அப் பெறும் அணிக்கு இது போன்ற தேசிய அளவிலான கொண்டாட்டங்களோ அல்லது விடுமுறையோ அறிவிக்கப்படுவது வழக்கம் அல்ல.. தோற்ற பிறகு வீரர்கள் தங்களின் கிளப் கால்பந்து போட்டிகளுக்குத் திரும்புவதை விடுத்து, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சரியல்ல என்று அர்ஜென்டினா மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த கொண்டாட்டங்கள் மற்றும் விடுமுறை அறிவிப்புக்கு மற்றொரு முக்கியக் காரணமும் கூறப்படுகிறது. அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தேசிய அணிக்காக விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டியாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2022 உலகக்கோப்பையில் அணியை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வழிநடத்திய மெஸ்ஸிக்கு விடைபெறும் விதமாகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிகிறது.
நேற்று போட்டியின் போது மெஸ்ஸியின் ஆட்டம் சற்று மந்தமாகவே இருந்தது. தோல்விக்குத் பின் மெஸ்ஸி மைதானத்தில் கண்ணீர் விட்டுக் அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதை சரிக்கட்ட இந்த கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


