Last Updated:
அரை நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவின் மேற்பரப்புக்கு நாசா அனுப்பி வைத்துள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நிலா குறித்து ஆய்வுகளைச் செய்தன. கடந்த 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘அப்பல்லோ 17’ விண்கலத்திற்கு பிறகு, மனிதர்கள் நிலவில் கால் தடம் பதிக்கவில்லை. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை நோக்கி மனிதர்களை நாசா அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 3.54 மணிக்கு நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
‘ஆர்ட்டெமிஸ் 2′ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச், மற்றும் கனடா விண்வெளி வீரரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் 10 நாட்கள் பயணமாக நிலவை சுற்றிவரவுள்ளனர். பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு, ஓரியன் விண்கலம் அவர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும். மனித வரலாற்றில் இதுவரை சென்ற மிகத் தொலைவு என்னும் புதிய சாதனையை எட்டும் தருணம் பயணத்தின் ஆறாம் நாளில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பல்லோ 13 விண்கலம் தான் இதுவரை மனிதனை ஏற்றி அதிக தொலைவு சென்ற விண்கலமாக பார்க்கப்படுகிறது. அந்த விண்கலம் பூமியிலிருந்து 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவு சென்று சாதனை படைத்தது. ஓரியன் விண்கலத்தின் தற்போதைய பயணம் இந்த சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆறாம் நாள் பயணத்தின்போது ஓரியன் விண்கலம் நிலவின் மறுபுறம் வளைந்து செல்ல உள்ளது. அப்போது விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 6 ஆயிரத்து 500 முதல் 9 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்குள் வரும் என்றும் அப்போது ஒரு மணி நேரம் வரை விண்வெளி குழுவினர் நிலவை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் பூமியுடன் வானொலி தொடர்பு 30 முதல் 50 நிமிடங்கள் துண்டிக்கப்படும் என்பதால் விண்வெளி ஆய்வுக் குழுவினர் முழுவதும் தங்களின் திறமையையே நம்ப வேண்டிய நிலை இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தின்படி விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். மாறாக நிலவைச் சுற்றி வருவார்கள். அப்போது தரைக்கட்டுப்பாட்டு மையம் முதல் ஓரியன் விண்கலம் மற்றும் அதன் பணியாளர்கள் வரையிலான முழு அமைப்பும் சரியாகச் செயல்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்.
எதிர்காலத்தில் மனிதர்களை நிலவில் இறக்கும் செயல்முறைகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும் இந்த பயணம் உதவும். நிலவை சுற்றி ஆய்வுப் பணியை முடித்த பின் ஓரியன் விண்கலம் பசிபிக் கடலில் தரை இறங்க உள்ளது. இந்த பத்து நாள் பயணத்தில் நான்கு பேர் மிகக் குறுகிய இடத்தில் வாழ வேண்டி இருக்கும். விண்வெளி வீரர்கள் அணிந்துள்ள ஆரஞ்சு நிற உடைகள், அவர்களின் பயணத்தின்போது அவர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீயிலிருந்து பாதுகாக்கும், வசதியான வெப்பநிலையைப் பராமரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
‘ஆர்ட்டெமிஸ் 2′ திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது. அத்துடன், 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்கள் நிலவுக்கு செல்லும் முதல் பயணம் என்பதால் உலகின் கவனம் இதன் மீது திரும்பியுள்ளது.

