Last Updated:
பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் பிரபல நகைக்கடையில் 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்தது. 25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பீகாரில் பிரபல நகைக்கடை ஒன்றிற்குள் புகுந்த 6 பேர் கொள்ளைக் கும்பல் ஒன்று, ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிடித்து சாவகாசமாக நகைகளை மூட்டை கட்டி எடுத்துச் சென்று பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம், கோபாலி சவுக் பகுதியில் பிரபலமான நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் பட்டப்பகலில் சுமார் 10.30 மணியளவில், அப்பகுதிக்கு 3 பைக்குகளில் 6 பேர் கும்பல் ஒன்று வந்து இறங்கியுள்ளது. கையில் துப்பாக்கி வைத்திருந்த அந்த 6 பேரும் நகைக்கடைக்குள் புகுந்து ஊழியர்களை மிரட்ட அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். கொள்ளையர்களை பார்த்த மிரண்டுபோன பெண் ஊழியர்கள் சிலர் கண்ணாடி டேபிளில் வைத்திருந்த நகைகளை எல்லாம் வேக வேகமா எடுத்து டேபிளுக்கு அடியில் பத்திரப்படுத்தினர்.
அதற்குள் கொள்ளைக்கும்பல் துப்பாக்கி முனையில் அவர்களை அனைவரையும் சிறை பிடித்தது. இதனைத்தொடர்ந்து ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து ஒருவர் துப்பாக்கிமுனையில் பிடித்து வைக்க, மற்றவர்கள் அங்கிருந்த நகைகளை எல்லாம் வாரிச்சுருட்டி பைகளுக்குள் திணிக்க ஆரம்பித்தனர். கடையில் இருந்த ஒவ்வொரு கண்ணாடியாக உடைத்தவர்கள் தங்கம், வைரம் என கண்ணில் பட்டதை எல்லாம் எடுத்து பைகளுக்குள் திணித்தனர். மேலும் காவலாளி உட்பட ஊழியர்கள் அனைவரையும் கைகளை தூக்கியபடி நிற்க வைத்து நிதானமாக கடையை சூறையாடியது அந்த கும்பல்.
இதையும் படிங்க: சார்ட்டர்டு விமானத்தை அதிரடியாக பறிமுதல் செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?
இதற்கிடையே கடைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வெளியே சென்றிருந்த கடை ஊழியர் ஒருவர் உள்ளே வர, அவரைப் பிடித்த கொள்ளை கும்பல் சரமாரியாகத் தாக்கி வரிசையில் உட்கார வைத்தது. அவரும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் கொள்ளையர்களின் உத்தரவுக்கு அடிபணிந்தார். இதற்கிடையே கடை ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிலர் சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள காவல்நிலையத்திற்கு போன் செய்துள்ளனர். ஆனால் அந்த காவல்நிலையத்தில் வழக்கம் போல் யாரும் செல்போனை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
சுமார் 30 முறை போன் செய்த பின் யாரோ ஒரு நபர் போனை எடுத்திருக்கிறார். 30 நிமிடத்தில் வந்து விடுகிறோம் என உறுதி அளித்திருக்கிறார் அந்த நபர். நடந்து வந்தால் கூட 15 நிமிடத்தில் வந்து விடலாம். எதற்காக 30 நிமிடம் எனக் கேட்பதற்குள் அந்த நபர் போனை வைத்து விட்டார். அதன்பின் கொள்ளைக் கும்பல் சாவகாசமாக நகைகளை மூட்டை கட்டிக் கொண்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தாங்கள் வந்த 3 பைக்குகளில் கிளம்பியிருக்கின்றனர். அதற்குள் இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியவர துப்பாக்கி ஏந்திய போலீஸ் குழு கொள்ளையர்களைப் பிடிக்க விரைந்தது.
கொள்ளையர்கள் டோரிகஞ்ச் நோக்கி தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற போலீசார் அவர்களை வழிமறித்து துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஒரு பைக்கில் சென்ற 2 கொள்ளையர்களுக்கு கால் மற்றும் பின்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர்கள் பைக்குடன் சரிந்து விழ அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை கைப்பற்றினர். தப்பியோடிய 4 கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே துப்பாக்கி குண்டு பாய்ந்த கொள்ளையர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொள்ளை குறித்து நகைக்கடை மேலாளர் தெரிவிக்கையில், ஒட்டு மொத்த கடையையும் கும்பல் துடைத்து எடுத்துச் சென்று விட்டதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் 25 கோடி இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சியில் உறை வைத்துள்ளது.
March 10, 2025 6:52 PM IST
அரை கிலோ மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்.. 30 போன் செய்தும் எடுக்காத போலீஸ்.. பீகார் கொள்ளையில் பகீர் தகவல்!


