Last Updated:
தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களில் 184 புதிய வகைகளை வெளியிட்டார்.
150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் நம் நாடான இந்தியா, அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களில் 184 புதிய வகைகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்த தகவலை தெரிவித்ததோடு, சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக இருப்பதாக கூறினார். அதிக மகசூல் தரும் விதைகளை உருவாக்குவதில் இந்தியா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், இப்போது உலக சந்தைகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாகவும் உள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்துவருவதை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர், ஒரு காலத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவிய நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகளவில் உணவு வழங்கும் நாடுகளில் ஒன்றாக மாறி, அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சியுள்ளது. இந்த சாதனை முன்னோடியில்லாதது என்று கூறினார்.
மேலும், நம் நாட்டில் போதுமான உணவு தானியம் கையிருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். புதிதாக வெளியிடப்பட்ட விதை வகைகள் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே 1969-ம் ஆண்டு gazette notification process தொடங்கியதிலிருந்து, இதுவரை மொத்தம் 7,205 பயிர் வகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று PTI தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிக மகசூல் தரும் 3,236 வகைகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்டன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 184 புதிய வகைகளில் 122 தானியங்கள், 6 பருப்பு வகைகள், 13 எண்ணெய் வித்துக்கள், 11 தீவனப் பயிர்கள், 6 கரும்பு வகைகள், 22 Bt cotton உட்பட 24 பருத்தி வகைகள் மற்றும் சணல் மற்றும் புகையிலையின் தலா ஒரு வகை ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அமைச்சர், விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் சிறந்த தரமான விளைச்சலை அடைய உதவுவதால் அவற்றின் மூலம் அதிக பயனடைவார்கள் என்று கூறினார்.
இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்ய பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேளாண் நிபுணர்களை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக்கொண்டார்.


