நாட்டிற்கு சில வகை அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த அவசரக் கூட்டுப் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
கடுமையான தட்டுப்பாடு
விவசாயத் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நிறுவனம் ஆகிய அமைப்புகளின் அண்மையத் தரவுகளின்படி, 2025ஃ26 பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் அளவு, நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதம் முதல் நாட்டில் இந்த அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நிலையான விலைகளின் கீழ் சம்பா மற்றும் கீரி சம்பாவுக்கான நுகர்வோர் கேள்வியைச் சமாளிப்பதற்காக, அவற்றுக்கு இணையான மாற்று அரிசிகளை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமம்
இதன்படி எடுக்கப்பட்ட கூட்டு முடிவின் அடிப்படையில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய, ‘எச்.எஸ். கோட் 1006.30.29’ இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பொன்னி சம்பா, கீரிஃபால் பொன்னி மற்றும் ஜி.ஆர். 11 என அழைக்கப்படும் அரிசி வகைகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அதிகபட்சமாக 1,040 மெட்ரிக் தொன் அரிசியை எந்தவொரு இறக்குமதியாளரும் இன்று முதலாம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்ய முடியும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகுதிகள் மே 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ இலங்கைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
இந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள், அதற்காக தனியாக இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

