சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் மைத்துனரான அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான, கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் பிளேஸில் உள்ள வீட்டில் சந்திரசேனாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்திரசேனாவும் டி சில்வாவும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் அனுஷ்கா டி சில்வா ஆகிய சகோதரிகளை மணந்திருப்பதால் இரு குடும்பங்களும் நெருங்கிய தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான விசாரணை
சரியான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வந்தாலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்திரசேனவின் இல்லம் கொழும்பில் உள்ள பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ளது எனவும் அவர் நேற்று அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு வந்தடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து அர்ஜுன ரணதுங்காவும் சம்பவ இடத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொருத்தமற்ற பிணையாளர்களைச் சமர்ப்பித்ததன் மூலம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு பிரதான நீதவான் நேற்று (07-05-2026) அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

