தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூன் 26) உத்தரவிட்டது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அவரின் இல்லத்தில் சோதனை நடத்தி அமலாக்கத் துறையினர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில அடைத்தனர்.
சிறையில் உள்ள கேஜரிவால் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
எனினும், அமலாக்கத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், திகார் சிறையில் இருந்த கேஜரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்னதாக கேஜ்ரிவாலை கைது செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் கேஜரிவாலை கைது செய்தனர்.
தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி அமிதாப் ராவத் முன்பு சிபிஐ அதிகாரிகள் கேஜரிவாலை இன்று மாலை ஆஜர்படுத்தினர்.
அவரிடம் விரிவான விசாரணை நடத்தவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து அறியவும் சிபிஐ தரப்பில் 3 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்து உத்தரவிட்டார்.

