உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘அரச நிதி முகாமைத்துவம்’ சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121(1)வது சரத்தின் பிரகாரம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘அரச நிதி முகாமைத்துவம்’ சட்டமூலத்தில் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றபப்பட வேண்டும்.
அதன்படி, “நீதித்துறை சேவை உறுப்பினர்கள்” என்ற வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் அரசியலமைப்பின் 3வது பிரிவுடன் வாசிக்கப்பட்ட 4(சீ), உறுப்பு 12(1) மற்றும் பிரிவு 108 ஆகியவற்றுடன் முரண்படுகிறது.
இவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மூலமாகவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும்.
எனினும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டபடி, பிரிவு 71 இல் “நீதிச் சேவை உறுப்பினர்கள்” என்ற வார்த்தைகளுக்கு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் பிரிவு 3(2)(பி) நீக்கப்பட வேண்டும் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தில் முன்மொழியப்பட்ட புதிய துணைப்பிரிவு சேர்க்கப்பட்டால், அந்த முரண்பாடுகள் நீங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரசுக்குச் சொந்தமான நிறுவனம்” என்ற வார்த்தைகளுக்கு வழங்கப்பட்ட விளக்கத்தில், அரசியலமைப்பின் 12(1) மற்றும் 148 வது பிரிவுக்கு முரணாக உள்ளது. இதன் சுருக்கத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இருந்தாலும் கூட, பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேலும் சில சரத்துக்களை நிறைவேற்றவும் விசேட பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானதென உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூறுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)

&w=1200&resize=1200,675&ssl=1)