அரச அதிகாரிகளின் சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30-06-2026) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
கடன் விபரங்கள்
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனடிப்படையில் இன்றைய தினத்திற்குப் பின்னர் சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்காத அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஒரே நேரத்தில் பெருமளவிலானோர் இணையவழி ஊடாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையதளத்திற்குள் பிரவேசித்து தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முயன்றதால் இணையதளத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்றைய தினத்திற்குள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போகும் நபர்களுக்கு ஒரு வார சலுகைக்காலத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜூலை மாதம் ஏழாம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

