Last Updated:
சண்டிகரில் உள்ள ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் கிளை ஒன்றில், ஹரியானா அரசுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் சுமார் 590 கோடி ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட துறையின் வங்கி கணக்கை மூடிவிட்டு நிதியை வேறொரு வங்கிக்கு மாற்றக் கோரி ஹரியானா அரசு சார்பில் மனு தரப்பட்டது.
அப்போது, வங்கியின் கணக்கு பதிவேட்டில் இருந்த இருப்புத் தொகைக்கும், அரசுத் துறை குறிப்பிட்ட தொகைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து மற்ற அரசுத் துறை கணக்குகளை ஆய்வு செய்தபோது, பல கணக்குகளில் இதே போன்ற குளறுபடிகள் இருப்பது உறுதியானது. இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு வங்கி ஊழியர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு வங்கிக் கணக்குகளில் 590 கோடி ரூபாய் வரை முறைகேடாக உள்ளது குறித்து வெளிநாட்டு விசாரணை முகமை மூலம் தடயவியல் தணிக்கை நடத்த வங்கி திட்டமிட்டுள்ளது. தவறு செய்த ஊழியர்கள் மற்றும் இதில் தொடர்புடைய வெளிநபர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வங்கி எச்சரித்துள்ளது.
இந்த முறைகேடு சண்டிகர் கிளையில் உள்ள குறிப்பிட்ட ஹரியானா அரசு கணக்குகளில் மட்டுமே நடந்துள்ளதாகவும் பொதுமக்களின் கணக்குகளுக்கோ பிற வாடிக்கையாளர்களுக்கோ பாதிப்பு இல்லை என்றும் விவரித்துள்ளது.
அரசு வங்கி கணக்கில் ரூ.590 கோடி முறைகேடு… சண்டிகரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்..!


