Last Updated:
லக்னோவில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் 20 குழந்தைகள் உடல்நலக் கோளாறால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நான்கு குழந்தைகள் பலியாகி, 16 குழந்தைகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள பாரா எனும் பகுதியில் அரசு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதில், பெற்றோரை இழந்த, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அந்த அரசு காப்பகத்தில் இருந்து 20 குழந்தைகள் திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக அருகே இருந்த லோக் பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் தற்போது நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர். மற்ற குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தைகள் உட்கொண்ட உணவு அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட மாஜிஸ்திரேட் விஷாக், “12 மற்றும் 17 வயதுடைய இரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகள் மரணித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “தமிழகத்தில் இரண்டு முனை போட்டி.. அது தவெக vs திமுக இடையே தான்” – பொதுக்குழுவில் விஜய் ஆவேசம்!
இது தொடர்பாக பேசிய மருத்துவர் ராஜீவ் குமார், “அரசு மறுவாழ்வு மையத்தில் இருந்து 20 குழந்தைகள் செவ்வாய் மாலை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இதில் நான்கு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி மரணித்தனர். 16 குழந்தைகளுக்கு ஐசியுவில் வைத்து சிகிச்சை அளித்துவருகிறோம். அவர்களின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக், மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு மாதிரிகளைப் பரிசோதிக்க எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகளின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதலில் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
March 28, 2025 8:24 PM IST


