அரசு ஊழியர்களுக்கு மோடி அரசின் தீபாவளி பரிசு: சம்பளம் எகிறப்போகுது.. கொண்டாட்டம் தான்..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சம்பளத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செலவினை சமாளிக்க ஆண்டுக்கு இரண்டு முறை சம்பளத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் 3% முதல் 4% வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைய 60% என்ற அளவில் உள்ள அகவிலைப்படி, 63% அல்லது 64% ஆக உயர வாய்ப்புள்ளது.

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு பண்டிகை காலத்திற்கு முன்பாக, அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும். குறிப்பாக நவராத்திரி அல்லது தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கான பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும். இருந்தாலும் ஜூலை மாதம் முதலே சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அரியர் பணமாக வரவு வைக்கப்பட்டுவிடும்.
இந்த அகவிலைப்படி உயர்வு இந்தியாவின் ஒட்டுமொத்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என கோடிக்கணக்கானோருக்கு பயனளிக்கும். சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் நேரடி பலன் அடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது, தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த 12 மாதங்களின் சராசரி பணவீக்க தரவுகளின் அடிப்படையில் இந்த உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, அகவிலைப்படி 60%-லிருந்து 63% அல்லது 64% ஆக உயர வாய்ப்புள்ளது. இதன்படி, லெவல் 1 ஊழியர்கள் அதாவது அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் பெறுவோருக்கு மாதாந்திர ஊதியம் தோராயமாக 540 முதல் 720 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். அதாவது அடிப்படை சம்பளத்தில் 64% என கணக்கிட்டு கொள்ளலாம்.
இந்த உயர்வு ஜூலை 1 அமலுக்கு வருவதால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவை தொகை, அரியர் பணமாக சேர்த்து அக்டோபர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். இதற்கிடையே , அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டிவிட்டதால், எதிர்காலத்தில் ஊதிய குழுவின் பரிந்துரைகளின்படி அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஊழியர் சங்கங்கள் தரப்பிலிருந்து வலுத்து வருகிறது.
8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் முழுமையாக அமலுக்கு வரும் வரை, தற்போதைய 7ஆவது ஊதிய குழுவின் விதிகளின்படியே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்படும். 2028ஆம் ஆண்டு ஜனவரி முதல் தான் 8ஆவது சம்பள கமிஷனே அமலுக்கு வரும் புதிய சம்பளம் கைக்கு வரும் என சொல்லப்படுகிறது. சம்பள கமிஷன் 2 ஆண்டுகள் தாமதமானாலும் அரியர் பணம் கணக்கிட்டு வரவு வைக்கப்படும்.

