பின்னல் மாலைகள் என்பது. சாதாரணப் பூக்களால் தொடுக்கப்படாமல், ஜரிகை நூல்கள், சந்தனச் சீவல்கள் மற்றும் துணி இழைகளைக் கொண்டு ஒரு வலைப்பின்னல் போல இவை கோர்க்கப்படுவதால், அலங்காரப் பின்னல் மாலைகள்” என்றும் அழைக்கிறார்கள்.. இவை சாதாரண மாலைகளை விட நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் கலைநயம் மிக்கவை.
‘சின்ன தறிப் பேட்டை’ என்ற பெயரிலிருந்து உருவான சிந்தாதிரிப்பேட்டை, ஒரு காலத்தில் நெசவாளர்களின் புகலிடமாக இருந்தது. இன்று அது கைவினைக்கலையின் மையமாக மாறியுள்ளது. குறிப்பாக, அய்யா முதலி மற்றும் அருணாசலம் தெருக்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர். பல இளைஞர்கள் இப்போது இத்தொழிலை நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைத்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்தக் கலை வேலைப்பாடுகள் சாமானியர் முதல் விஐபிக்கள் வரை அனைவருக்கும் எட்டும் வகையில் இருப்பது இதன் தனிச்சிறப்பு. மிகச்சிறிய அளவிலான அடிப்படை சந்தன மாலைகள் வெறும் 150 ரூபாயிலிருந்தே தொடங்குகின்றன. மாலையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் உயரத்தைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. வாடிக்கையாளர் கொண்டு வரும் பொருட்களுக்கு ஏற்ப, அவர்களின் பட்ஜெட்டுக்குள் ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை உருவாக்குவதில் இவர்கள் வல்லவர்கள்.
மாலைகள் மட்டுமின்றி சிந்தாதிரிப்பேட்டையில் தயாரிக்கப்படும் கோவில் குடைகள், குறிப்பாக புரட்டாசியில் திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக சமர்ப்பிக்கப்படும் ‘திருக்குடைகள்’, மிகவும் பிரம்மாண்டமானவை. நுணுக்கமான துணி வேலை, ஜரிகை, எம்பிராய்டரி ஆகியவற்றால் உருவாகும் இக்குடைகள் தெய்வங்களுக்கு கம்பீரம் சேர்க்கின்றன.
தற்போது தேர்தலை முன்னிட்டு, மாலையின் பதக்கத்தில் தலைவர்களின் முகங்களை தத்ரூபமாகப் பொருத்துவது (Face-Value) மற்றும் கட்சியின் கொடி வண்ணங்களை ஜரிகை நூல்களாக இழைப்பது போன்ற பணிகள் மும்முரமாக நடக்கின்றன. மேலும், ரூபாய் நோட்டுகளை அடுக்கி உருவாக்கப்படும் உயரமான கிரீடங்கள் (Kritams), ஒரு கட்சியின் வலிமையை மேடையில் பறைசாற்றும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் பல ஆளுமைகளுக்குச் சூட்டப்படும் மாலைகள் இந்தத் தெருக்களில் உருவானவைதான். காதி கிராஃப்ட் போன்ற அரசு நிறுவனங்களுக்கும் , இங்கிருந்து லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இந்த மாலைகள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயந்திரங்களால் செய்ய முடியாத, மனிதக் கரங்களின் நேர்த்தியில் உருவாகும் இந்த “சிந்தாதிரிப்பேட்டை மேஜிக்”, தமிழகத்தின் ஒரு அழியாத முக்கிய அடையாளமாகும்.
இந்தத் தொழிலில் இரண்டாவது தலைமுறையாக ஈடுபட்டுள்ள கருமாரியம்மன் Lace Garlands அசோக் போன்றவர்கள் கூறுகையில், இது தங்களது பரம்பரைத் தொழில் என்றும், தற்போது தேர்தல் காலம் என்பதால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்குச் சுமார் 150 மாலைகள் வரையிலும், மாதம் 4,500 மாலைகள் வரையிலும் உற்பத்தி செய்து பல்வேறு ஊர்களுக்கு விநியோகிப்பதாக அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

