உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் எதிரொலித்து வருகிறது. பாஜக தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என உறுதி அளித்தது. இதனால், பாஜக மீது கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து கடந்த நவம்பர் 9, 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு, ராமர் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையை முன்னின்று நடத்திய பிரதமர் மோடி, ராமர் கோயிலின் தரைத்தளத்தையும் கடந்த ஜனவரியில் திறந்து வைத்தார்.
பல ஆண்டுகளாக கொடுத்து வந்த வாக்குறுதியின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதால், இந்த முறை உத்தரபிரதேசத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதேபோல், நாட்டின் பல பகுதிகளிலும் அயோத்தி ராமர் கோயில் மூலம் கணிசமான வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது.
இதையும் படிங்க :
உத்தர பிரதேசத்தை தட்டித் தூக்கிய ‘இந்தியா’ கூட்டணி… பாஜக கூட்டணியை வீழ்த்திய பின்னணி என்ன?
ஆனால், அந்த பலன் உத்தரபிரதேசத்திலேயே பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளார்.
ராமர் கோயில் விவகாரத்தால் நீண்டகாலமாக பாஜக வசம் இருந்த பைசாபாத் தொகுதி, கடந்த 2009ல் மட்டுமே காங்கிரஸ் கைக்கு மாறியது. அதன்பிறகு மீண்டும் பாஜக வசம் வந்த அந்த தொகுதியில் கடந்த 2014 முதல் லல்லுசிங் பாஜக எம்.பி.யாக இருந்தார். தற்போது அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)