அம்மாவின் தங்க வளையலை கொண்டு ரூ.11,000 கோடி பிஸ்னஸை உருவாக்கிய லலிதா ஜூவல்லரி கிரண் குமார்..!!
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களுள் ஒன்று லலிதா ஜூவல்லரி. இதன் தலைவர் கிரண் குமாரை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் லலிதா ஜுவல்லரியின் அனைத்து விளம்பரங்களிலும் இவரே தோன்றுவார். கிரண் குமாரின் இந்த வெற்றி பயணம் அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கிரண் குமார். இவர் வீட்டில் 8ஆவது குழந்தை. இவரது தந்தை ஒரு நகை கடையில் அக்கவுண்ட்ண்டாக இருந்தார். இதனால் சிறு வயதில் இருந்தே இவருக்கு தங்க வியாபாரத்தில் ஆர்வம் இருந்தது. திடீரென 5-ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியில் விட்ட அவர் தொழில் உலகில் கால்பதித்தார். கிட்டதட்ட 12 வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் நெல்லூரில் இருந்து தங்கம் சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை கண்ட கிரண் குமார். நாம் ஏன் இந்த தொழிலில் இறங்க கூடாது என யோசித்தாராம், ஆனால் இதற்கு பெரிய தொகை தேவைப்பட்டதாம். எனவே தன்னுடைய தாயாரிடம் அவர் கூறியுள்ளார். பெரிய அளவில் முதலீடோ பின்புலமோ இல்லாமல் தன் தாயாரின் நான்கு தங்க வளையல்களை மூலதனமாக கொண்டு பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் தனது தங்க வணிகத்தை தொடங்கியுள்ளார்.
48 கிராம் எடை கொண்ட அம்மாவின் தங்க வளையல்களை நகை தயாரிக்கும் கலைஞரிடம் ஒப்படைத்து 6 ஜோடி காதணிகளை வாங்கினாராம். அதனை கொண்டு வந்து சென்னையில் நகை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விற்க தொடங்கினார். தொடக்க காலத்தில் பல்வேறு சிக்கல்களையும் அவர் சந்திக்க நேரிட்டது. இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், தங்கத்தின் தரத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதிலும் அவர் தீவிரமாக கவனம் செலுத்தினார்.
முதன்முதலில் லலிதா ஜூவல்லரியை நடத்திய கந்தசாமி பிள்ளை தான் இவரை நம்பி ந்கைகளை வாங்கியுள்ளார். பின்னர் படிப்படியாக ஆர்டர்கள் அதிகரிக்கவே நெல்லூரில் இருந்து பிரதான மொத்த விலை தங்க நகை விற்பனையாளராக மாறினார். 1999இல் லலிதா நகை கடை உரிமையாளர் கந்தசாமி பிள்ளை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதை அறிந்த கிரண் குமார் லலிதா ஜுவல்லரியை வாங்கி நடத்த தொடங்கினார்.
முதலில் நிறுவன கடன்களை அடைத்தார். அப்போது தான் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஏற்கனவே மொத்த விலை நகை விற்பனையாளராக இருந்ததால் குறைந்த விலையில் அதாவது குறைந்த செய்கூலி சேதாரத்தில் தங்கம் விற்பனை என்ற கான்செப்டை கொண்டு வந்தார். இந்த வணிக அணுகுமுறையே லலிதா ஜூவல்லரியை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
இன்று லலிதா ஜூவல்லரி நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாபெரும் வணிக சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 11,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம், வெளிப்படையான விலை மற்றும் குறைந்த செய்கூலி போன்ற திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
தற்போது இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தையில் லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. முறையான கல்வி பின்புலம் இல்லாவிட்டாலும், சந்தையின் தேவையை துல்லியமாக புரிந்து கொள்ளும் திறனே இவரின் வெற்றிக்கு காரணம். கிரண் குமாரின் வெற்றி, முறையான கல்வி இல்லாவிட்டாலும், சரியான இலக்கு, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எத்தகைய உயரத்தையும் தொட முடியும் என்பதற்கு சிறந்த சான்றாக திகழ்கிறது.தற்போது லலிதா ஜுவல்லரி 51 நகரங்களில் 61 கடைகளுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டிலேயே நகை உற்பத்தி ஆலையும் கொண்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
