ஆடிப் பூரத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக திருநெல்வேலி பேன்சி ஸ்டோர்களில் வளையல்கள் தற்போது விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்து, தற்போது முதலே வளையல்களைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
புராணத்தில் தேவர்களின் இரவு காலமான தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகம் இடம்பெறும். ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பக்தர்கள் இறைவழிபாட்டை மேற்கொள்வர்.
ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதும் வழக்கம். ஆடி மாதத்தில் அம்பாளுக்குத் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆடிமாதத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாக ஆடிப்பூரம் நிகழ்ச்சி உள்ளது.
இதையும் படிங்க: ஸ்டேட் பேங்கில் 1040 அதிகாரி பணியிடங்கள்… பட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு…
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்பாள் தோன்றினாள் என்கிற ஐதீகம் அடிப்படையில், அம்மனுக்கு அன்றைய தினத்தில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் நிகழ்வு, வரும் ஆக.7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அம்பாளுக்கு உரிய நாளான ஆடிப்பூர தினத்தன்று அன்னைக்கு வளைகாப்பு நடப்பதோடு, அம்பாளுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டை வாங்கி பெண்கள் அணிந்து கொள்வர். இதனால் குடும்பத்தில் சுபநிகழ்வுகள், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம், பிள்ளை வரம் வேண்டுவோருக்குக் குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும். ஆடிப் பூரத்தை முன்னிட்டு நெல்லை பேன்சி ஸ்டோர்களுக்கு இப்போதே வளையல்களின் வரத்து அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ப்ரோசோபாத் நகரில் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படும் வளையல்கள் சென்னை, மதுரை மொத்தக் கடைகள் மூலமாகத் தற்போது திருநெல்வேலி மாநகரக் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. ஆடிப்பூர தினத்தன்று அம்மன்களுக்கு அணிவித்திட பெரும்பாலான பக்தர்கள் பச்சை மற்றும் சிவப்பு வளையல்களையே அதிகம் வாங்கி செல்கின்றனர். இதுதவிர ஊதா, மஞ்சள், மெரூன் கலர் வளையல்களும் அதிகமாக வந்து குவிந்துள்ளன.
இதையும் படிங்க: நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 102 காலியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா..?
இதுகுறித்து பாளையங்கோட்டை வளையல் கடைக்காரர்கள் கூறுகையில், “வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு வண்ண, வண்ண வளையல்களையே இப்போதே கடைகளில் குவித்து வைத்துள்ளோம். கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சிலர் மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.
அம்மனுக்கு வளைகாப்புக்கு முந்தைய ஒரு வார காலத்திற்கு அதிக விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடைகளில் 10 டஜன் வளையல்களை ரூ.150க்கு விற்கிறோம். 14 டஜன் என்றால் ரூ.220க்கும், 6 டஜன் என்றால் ரூ.100க்கும் விற்று வருகிறோம். குறைந்தபட்சமாகச் சிலர் ஒரு டஜன் வளையல்கள் கேட்டால், அவற்றை ரூ.20க்கு விற்கிறோம். அதற்கு குறைவான விற்பனை கிடையாது. அம்பாளுக்கு பிடித்தமான சிவப்பு, பச்சை வளையல்களையே அதிகளவில் வாங்கி அடுக்கி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)