Last Updated:
பிகாரில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் படத்தை காலடியில் வைத்திருப்பார்கள். நான் அவரது புகைப்படத்தை இதயத்தின் அருகில் வைத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை அவர்களின் காலடியில் வைப்பதாகவும், தான் தனது இதயத்தில் அம்பேத்கரை வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஆர்.ஜே.டி. கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 11ஆம் தேதி தனது 77வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக கடந்த 11ஆம் தேதி அவரை வாழ்த்தவும், அவரிடம் ஆசி வாங்கவும் அவரது கட்சித் தொண்டர்கள் அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது லாலு பிரசாத், நாற்காலியில் அமர்ந்தபடி, தனது கால்களை சோஃபா மீது நீட்டியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு வாழ்த்துச் சொல்லி பரிசளிக்க அங்குச் சென்ற நிர்வாகி ஒருவர் அம்பேத்கர் படத்தையும் கையில் எடுத்துச் சென்றிருந்தார். அப்படி எடுத்துச் சென்ற படத்தை நிர்வாகி லாலுவின் காலின் அருகே வைத்துள்ளார். பின்னர் லாலுவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து விளக்கம் கேட்டு மாநிலப் பட்டியலின சமூக ஆணையம் அவருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இன்று பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரின் புகைப்படங்களை தங்கள் காலடியில் வைத்திருப்பார்கள். நான் அவரது புகைப்படத்தை என் இதயத்திற்கு அருகில் வைத்திருப்பேன். தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது அவர்களுக்கு மரியாதை இல்லாததால், நடந்ததற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று அவர் கூறினார்.
June 20, 2025 5:21 PM IST
“அம்பேத்கர் படத்தை காலடியில் வைக்கும் எதிர்க்கட்சிகள்… நான் இதயத்தின் அருகே வைத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி


