லெபனானில் இருந்து எழும் எந்தவொரு அச்சுறுத்தலையும் இஸ்ரேல் தொடர்ந்து முறியடிக்கும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மூன்று வார கால போர்நிறுத்த நீட்டிப்பை அறிவித்த அடுத்த நாளே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான அமைதி முயற்சியை ஹிஸ்புல்லா அமைப்பு சீர்குலைக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நாம் தொடங்கியுள்ளோம்.
பாதுகாப்புப் படை
இருப்பினும் ஹிஸ்புல்லா இதனைச் சதி செய்து தடுக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகத் தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), இதற்குப் பதிலடியாகத் தெற்கு லெபனானின் டெய்ர் ஆமேஸ் (Deir Aames) பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது.

அத்தோடு தெற்கு லெபனானின் பின்ட் ஜபெயில் (Bint Jbeil) பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரடித் துப்பாக்கிச் சமரில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில், நாட்டின் வடபகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இஸ்ரேல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதையும் இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் எழக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் உட்பட எதற்கும் எதிராகத் தன்னிச்சையாகச் செயல்படும் முழு அதிகாரத்தை இஸ்ரேல் தக்கவைத்துள்ளதாக நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

