கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில், உலகளவில் முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றைப் பொலிவியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
‘லெப்பார்டஸ் தில்காயோ’ (Leopardus tilcayo) அல்லது ‘தில்காயோ புலிப் பூனை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், நமது வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை விட அளவில் மிகவும் சிறியதாகவும், உடலின் மீது சிறுத்தை போன்ற புள்ளிகளுடனும் காணப்படுகிறது.
பொலிவியாவின் ஆன்டீஸ் மலைத்தொடர் மற்றும் அமைசான் காடுகள் சங்கமிக்கும் யோங்காஸ் (Yungas) மழைக்காடு பகுதியில் வாழும் இந்தச் சிறு பூனை தொடர்பான ஆய்வு முடிவுகள், பிரபல ‘கரண்ட் பயாலஜி’ (Current Biology) அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
உள்ளூர்வாசி ஒருவர் இந்த பூனையைச் சாதாரணப் பூனைக் குட்டி எனத் தவறாகக் கருதி, தனது வீட்டில் சோறு, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். பின்னர் அது காட்டுப்பூனை எனத் தெரிந்ததும், லா பாஸ் நகரிலுள்ள வனவிலங்கு காப்பகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அங்கு தன்னார்வலராகப் பணியாற்றிய ஆய்வாளர் பாவ்லா நோகலெஸ்-அஸ்காரன்ஸ் (Paola Nogales-Ascarrunz) இதன் தனித்துவமான உடலமைப்பைக் கண்டு, மரபணுச் சோதனை மேற்கொண்டபோதே இது சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தனி இனமாகப் பிரிந்த புதிய காட்டுப்பூனை இனம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இப்பகுதி பழங்குடியின மக்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பூனையை ‘தில்காயோ’ என்றே அழைத்து வந்ததால், விஞ்ஞானிகளும் அதே பாரம்பரியப் பெயரையே இதற்குச் சூட்டியுள்ளனர். தற்போது விவசாயம் மற்றும் காடழிப்பு காரணமாக இதன் வாழ்விடம் வேகமாக அழிந்து வருவதால், இந்த அரிய பூனை இனத்தைப் பாதுகாக்க உடனடியாக சர்வதேச நடவடிக்கை தேவை என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.



