அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கருக்கலைப்பு உரிமை, வர்த்தகப் போர், புலம்பெயர்ந்தோர் நலன் உள்ளிட்ட பல விஷயங்களில் காரசார விவாதம் நடந்த நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்!
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸும் டொனால்ட் ட்ரம்பும் நேருக்கு நேர் விவாதத்தில் முதன்முறையாக பங்கேற்றனர். மேடைக்கு வந்த கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் அருகே சென்று கை குலுக்கி நல்ல விவாதம் நடத்தலாம் என்று கூறினார். அதற்கு “தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி” என்று பதிலளித்தார் ட்ரம்ப். பின்னர் தொடங்கிய விவாதத்தில், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரமும் சுகாதாரமும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக கமலா கூறினார். அதற்கு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டதாகவும் உலகிற்கே மருத்துவ உதவிகளை வழங்கியதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், மக்களுக்காக ட்ரம்பிடம் எந்த திட்டமும் இல்லை என்று கூறினார். அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் ட்ரம்ப்.
அதே சமயம் ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சிரிப்பு, ஆச்சரியம், வெட்கம் என்று தனது முகபாவனைகளால் பதிலளித்தார் கமலா ஹாரிஸ். இந்த முகபாவனைகள் நெட்டிசன்களால் தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அமெரிக்காவில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க புலம்பெயர்ந்தோரே காரணம் என கூறிய ட்ரம்ப், ஹைதி புலம்பெயர் மக்கள், செல்லப் பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதாக கூறினார். இதைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார் கமலா ஹாரிஸ்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களை வாக்களிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் தேர்தல்களில் மோசடி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், சர்வாதிகாரிகளுடன் ட்ரம்ப் உறவு வைத்துள்ளதாக சாடினார். வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக் கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே என கூறினார்.
இருவருக்கும் இடையே கருக்கலைப்பு குறித்த காரசார விவாதம் நடைபெற்றது. 9 மாத கருவைக் கலைப்பதை ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொள்வதாகவும், இது படுகொலைக்கு சமம் என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அதற்கு “ஒரு பெண்ணின் உடல் சார்ந்த பிரச்சனையில் மற்ற ஒருவர் முடிவெடுக்க எந்த உரிமையும் இல்லை” என்று பதிலளித்தார் ஹாரிஸ்.
குழந்தை பிறந்த பிறகு அதைக் கொல்ல சில மாநிலங்கள் அனுமதிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்ட, அது பொய்யான தகவல் என நடுவர்களால் உடனே மறுக்கப்பட்டது.
Also Read |
“என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்” – ஆர்த்தி விளக்கம்!
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “9 மாதத்தில் கருக்கலைக்க நீங்கள் விரும்பிவீர்களா?” என்று ஹாரிஸை நோக்கிக் கேட்டார். தன்னைப் பார்த்து எப்படி இந்த கேள்வியைக் கேட்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கமலா ஹாரிஸ்.
வெளியுறவுக் கொள்கை குறித்து பேசியபோது, சீனாவுடன் ஒப்பந்தமிட்டு அமெரிக்காவின் சிப்களை விற்று விட்டதாக சாடினார் கமலா ஹாரிஸ். ஆனால், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல பில்லியன் டாலர்கள் வருவாய் வர தானே காரணம் என கூறினார் ட்ரம்ப்.
விவாதத்தில் அனல் பறக்க, பாலியல் வன்கொடுமை புகாருக்கு உள்ளானவர் ட்ரம்ப் என்றும், மார்க்சிய சித்தாந்தாந்தவாதி கமலா என்றும் தனிப்பட்ட முறையில் இருவரும் தாக்கிக் கொண்டனர்.
கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தனக்கு கவலையில்லை என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் ட்ரம்ப்.
தான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன்- ரஷ்யா போரும், இஸ்ரேல்- காசா போரும் ஏற்பட்டிருக்காது என ட்ரம்ப் கூறினார். இதனை மறுத்த கமலா, ட்ரம்ப் அதிபராக இருந்தால், உக்ரைனின் கீவிலேயே போய் ரஷ்ய அதிபர் புதின் நிரந்தரமாக தங்கியிருப்பார் என்று பதிலளித்தார்.
தான் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து பேசுவதாகவும் ட்ரம்ப் பின்னோக்கி அழைத்துச் செல்வதாகவும் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் பைடன் என்றும் மோசமான துணை அதிபர் கமலா என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார் டொனால்ட் ட்ரம்ப்.
.
&w=750&resize=750,375&ssl=1)
