நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்திறன் துறையின் தலைவராக நியமித்தார். அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதே இத்துறையின் நோக்கம் என்றும் அப்போது ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் பெரிய அழகிய வரி என்ற மசோதாவை அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியை எலான் மஸ்க் ராஜினாமா செய்தார். தற்போது இந்த மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. அதிபர் ட்ரம்புக்கும், எலான் மஸ்குக்கும் மோதல் முற்றிய நிலையில் ட்ரம்புக்கு எதிராக புதிதாக கட்சி ஒன்றையும் நேற்று முன்தினம் எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் சீண்டியுள்ளார் எலான் மஸ்க். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் அதிபர் ட்ரம்பின் பெயர் உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். அதிபராக இருப்பதால் ட்ரம்ப் பெயர் அந்த ஆவணங்களில் இருந்து வெளியாகாமல் உள்ளது என்றும் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று எக்ஸ் பதிவில் மஸ்க் கூறும்போது, “இப்போது என்ன நேரம். அங்கு பாருங்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நேரம் மீண்டும் 12 மணியாகிவிட்டது. கைது விவகாரம்’’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள படத்தில் அதிகாரப்பூர்வ ஜெப்ரி எப்ஸ்டீன் கைது நேரம்: 0 0 0 0 என்று கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த பதிவு அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.