பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன… அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்… என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
இது உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியையும், பங்குச்சந்தையும் சரிவையும் ஏற்படுத்தியதால் சில உலக நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் வரியை குறைத்தன. மேலும், அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.
இதன் விளைவாக, ஏப்ரல் 9-ம் தேதி அமலில் இருந்த பரஸ்பர வரிகளை அடுத்த 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார் ட்ரம்ப்.

அமெரிக்கா-சீனாவிற்கு இடையேயான பிரச்னை என்ன?
பரஸ்பர வரி விதிப்பிற்குப் பிறகு, பல நாடுகள் சமாதானக் கொடியைப் பறக்கவிட்ட போதிலும், சீனா மட்டும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு “பரஸ்பர வரிக்கு பரஸ்பர வரி” என்று கூறி வரி விதித்து முறுக்கிக் கொண்டு நின்றது.

