Last Updated:
ஈரான் நாட்டுக்கு சீனா ஆதரவு அளிக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்ளும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபா அருகே ஈரான் ஏவுகணையை வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தொடர்ந்து மேற்கு ஆசியாவில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியா இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பைப் போற்றுகிறோம். ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் ஆதரவளிக்கிறது. மேலும் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் ஆதரவளிக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தளத்தின் மூலம் நீதியை நிலைநிறுத்துதல், அமைதிக்காக பாடுபடுதல் மற்றும் போரை நிறுத்துதல் உள்ளிட்ட ஆக்கபூர்வமான பங்கை வகிக்க சீனாவும் தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; “ஈரானுக்கு ஆதரவு அளிக்கிறோம்” – சீனா பகிரங்க அறிவிப்பு


