‘தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு’ என்றொரு திட்டத்தைக் கையில் எடுத்து, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அதிர வைத்துள்ளது, அண்டை மாநிலமான கர்நாடகா.
‘நிர்வாகம் சார்ந்த வேலைகளில் 50%, நிர்வாகம் சாராத வேலைகளில் 75%, குரூப் சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே தர வேண்டும்’ என்கிற மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தது, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. எப்போதுமே கர்நாடகாவில் இப்படிப்பட்ட ‘மண்ணின் மைந்தர்’ கோஷங்களுக்கு பெரும்கூட்டமே லாலி பாடுவது வாடிக்கை. ஆனால், இந்தத் தடவை அது ‘பூமராங்’ ஆகிவிட்டது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழில் நகரம் எனும் அளவுக்கு உலக அளவில் புகழ்பெற்றிருக்கிறது கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு. உலகின் பல நாடுகளிலிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் இங்கே குவிந்து தொழில் நடத்தி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தின் பல பாகங்களும் வளம்பெற்று வளர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இப்படிப்பட்ட கோஷத்துக்கு ஆதரவைவிட எதிர்ப்பே அதிக மாகக் கிளம்ப, ஆடிப்போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. தனியார் நிறுவனங்கள் முக்கியமாக, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பின. மத்திய அமைச்சர் தொடங்கி பலரும் தங்களின் அதிருப்தியைக் காட்டமாக வெளிப்படுத்த… பின்வாங்கியிருக்கிறது கர்நாடக அரசு.
‘மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை’ என்கிற வாதம், ஒரு காலத்துக்கு சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு உலகமே ஒரு கூரையின் கீழ் எனும் அளவுக்குத் தொழில்நுட்பப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. உலக மக்கள், எந்தெந்த நாடுகளிலோ பணியாற்றிக்கொண்டுள்ளனர், வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், இது போன்ற வாதங்களுக்கு வேலையே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
கர்நாடகா என்ன… அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலேயே இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படும் கொடுமையும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினருக்கான பணிநிமித்த விசாவை நிறுத்தி வைக்கத் துடித்தார் அன்றைக்கு ஜனாதிபதியாக இருந்த டெனால்டு ட்ரம்ப். ‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’ என்றபடி வெளிநாட்டினரை வெளியேற்றும் அளவுக்கெல்லாம் கெடுபிடி காட்டினார். ஆனால், உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அமெரிக்காவில் ஜாம்பவான்களாக இருக்கும் பெரும்பெரும் தொழில்நுட்ப நிறுவன அதிபர்களே… ‘தங்களின் அலுவலகங்களை அமெரிக்காவுக்கு வெளியே மாற்ற வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்தனர். வேறு வழியில்லாமல் ட்ரம்ப் அப்போது பணிந்தார்.
அமெரிக்காவிலேயே இந்த நிலை. ம்… கர்நாடகம்… இன்னும் சுத்த கர்நாடக மாகவே இருக்கிறது!
– ஆசிரியர்

