புதுடெல்லி:
இருதரப்பு வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில், அமெரிக்க அரசாங்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்துகொண்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, இந்திய அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
சமூக ஊடகத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள சு.சுவாமி, “அமெரிக்க அரசுடன் பிரதமர் மோடி செய்துகொண்ட சமரசம் தொடர்பான தகவல்களை நான் வெளியிட்டால், அது அவரது பிரதமர் பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தும்,” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைக் கண்டு ஏன் இவ்வளவு அச்சப்படுகிறார் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தனக்குத் தெரிந்த சில முக்கிய நபர்கள், பிரதமர் மோடி அமெரிக்க அரசுடன் சமரசம் செய்துகொண்டதாகத் தன்னிடம் கூறியதாகவும் சு.சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது ஆளும் கட்சியான பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரே இத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அல்லது பிரதமர் அலுவலகம் சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
The post அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொண்டாரா பிரதமர் மோடி? சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

