
ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, அமெரிக்காவிற்கு எதிராகத் தனது முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, அமெரிக்காவிற்கு எதிராகத் தனது முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். வியாழக்கிழமை ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்ட இந்த அறிக்கையில், அமெரிக்கப் படைகள் பிராந்தியத்தை விட்டு வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்?
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் காமெனி குறிப்பிட்டுள்ளார். “அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்ட அமெரிக்காவின் முகமூடி இப்போது கிழிந்துவிட்டது” என அவர் சாடியுள்ளார்.
தந்தையின் மரணத்திற்குப் பழி:
தனது தந்தை அலி காமெனியின் மரணம் மற்றும் போரில் உயிரிழந்த ஈரானியர்களுக்காக நிச்சயம் பழிவாங்குவோம் என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “வீரமரணமடைந்தவர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது. இழப்பீடு வழங்க மறுத்தால், எதிரிகளின் சொத்துக்களை அழித்தேனும் அதனைப் பெறுவோம்” என மொஜ்தபா காமெனி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று நிபந்தனைகள்:
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அமைதி பேச்சுவார்த்தைக்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்:
ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்.
எதிர்காலப் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும்.
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்தப் போர், ஒருவேளை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈரானின் பிடிவாதமான போக்கினால் உடனடியாக முடிவுக்கு வராது என்றே கணிக்கப்படுகிறது.

