நியூ ஜெர்சியில் வசிக்கும் 20 வயது முகுல் வர்மா என்பவர் பகிர்ந்த ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், முகுல் வர்மா மற்றும் அவரது நண்பர்கள் நியூ ஜெர்சியில் உள்ள பரபரப்பான ஒரு தெருவில் பட்டாசுகளை வெடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் தெளித்து, பட்டாசுகளில் இருந்து வெளியான தீ மற்றும் புகையை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதும், பலரும் முகுலை கடுமையாக விமர்சித்தனர். அவர் பொறுப்பற்றவராக நடந்து கொண்டதாகவும், உள்ளூர் சட்டங்களை அவர் மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பலர் தெரிவித்துள்ள கருத்துகளில், “நீங்கள் செய்ததை நினைத்து பெருமைப்படுகிறீர்களா?”, “இதனால் தான் வெளிநாடுகளில் இருக்கும் எங்களை சிலர் வெறுக்கிறார்கள்” போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றன.
மற்றவர்கள், “அவர்கள் சாலைகளை எவ்வளவு அழுக்காக மாற்றியிருக்கிறார்கள் என்பதை பாருங்கள்”, “இது ஒன்றும் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல” மற்றும் “இந்திய குடிமக்களின் மனநிலை இதுபோன்றது தான்” என்று விமர்சனம் செய்துள்ளனர்.
எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கிய நிலையில், முகுல் வர்மா இதுகுறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, இந்த தீபாவளி கொண்டாட்டம் நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது மற்றும் பட்டாசுகள் வெடிப்பதும் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதாகும். சாலைத் தடுப்புகள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென அனுமதிக்கப்படாத ஸ்கைஷாட்களை வெடிக்க வைத்ததால், தீயணைப்பு படை தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுக்க அல்ல, பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டுமே தண்ணீரை தெளித்தது என்று விளக்கம் அளித்தார்.
மேலும், காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வை கண்காணித்து, மக்களிடம் எதிர்மறை தகவல்களை பரப்பாமல் இருக்கவும் வலியுறுத்தினர். மேலும், முகுல் வர்மா, தீபாவளி என்பது ஒளி, அன்பு மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதை தான் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் முகிலுக்கு எதிரான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து அவரது விளக்கத்திற்கு பிறகு, சில பயனர்கள் முகுலை ஆதரித்து, அவர் தவறாக குறிவைக்கப்பட்டார் எனக் கூறினர். அதே நேரத்தில், மற்றவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது, அங்கு பொது கொண்டாட்டங்களில் ஈடுபட்டடிருக்கும் போது உள்ளூர் விதிமுறைகளை கவனித்தல் அவசியம் என்பதை வலியுறுத்தினர். இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் உள்ளூர் விதிமுறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்குகிறது.
October 24, 2025 9:39 PM IST

