சந்தைகளை பாதிக்கும் காரணிகள்
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் பேசுகையில்:
“திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
1.முற்றிலும் அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.
2.அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.
3. அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், அமெரிக்காவை மட்டும் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் நேரடியாக கடுமையான பாதிப்பைச் சந்திக்கும்.
அமெரிக்கா மற்றும் இதர சந்தைகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் குறைந்த அளவிலான பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்காவை சாராத நிறுவனங்களும் சிறிய அளவில் பாதிக்கப்படும். ஏனெனில் மேற்சொன்ன இருதரப்பும் அமெரிக்காவை தவிர்த்து மற்ற சந்தைகளை நோக்கிச் செல்லும்போது போட்டி உருவாகி விலை குறைப்பு மற்றும் ஆர்டர்கள் பிற நிறுவனங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகும்.

பொருளாதார இழப்பு
அதுமட்டுமில்லாமல், ஆண்டுக்கு சுமார் ரூ. 2,000–2,500 கோடி அளவுக்கான பொருளாதார இழப்பும், ரூ. 5,000–7,000 கோடி அளவிலான வர்த்தக இழப்பும் நேரிட வாய்ப்பு அதிகம் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை குறைக்கத் தொடங்கி, பின் வேலை இழப்பு வரை செல்லும் அபாயமும் உள்ளது.
இது திருப்பூர் பின்னலாடைத் துறையை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
தொழிலாளர்கள் வேலை இழப்பதும், தாக்குப்பிடிக்க இயலாத தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழில் பின்னடைவு காரணமாக வரி வசூல் பாதிப்பும், வங்கிகளில் வாரா கடன்கள் அதிகரிப்பதும் போன்றவை நிகழும் அபாயம் உள்ளது.
மத்திய அரசு அமெரிக்க அரசுடன் பேசி விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்,” என்றார்.

