Last Updated:
2010ஆம் ஆண்டில் 4500 கோடியாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி இன்று 64,000 கோடியை எட்டியுள்ளது. இதில் 24 ஆயிரம் கோடி அமெரிக்காவிற்கு மட்டும் கடல் உணவு ஏற்றுமதி நடக்கிறது.
கடல் உணவு ஏற்றுமதியில் உலகின் மூன்றாவது பெரிய நாடான இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குக் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், ஆந்திராவிலிருந்து சுமார் 70 சதவிகிதமும் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 30 சதவிகிதமும் கடல் உணவுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அமெரிக்காவிற்குக் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடியில் மட்டும் நான்கு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், நண்டு உள்ளிட்ட உயர்ரகக் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடல் உணவு கடந்த 20 வருட காலமாக நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. 2010ஆம் ஆண்டில் 4500 கோடியாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி இன்று 64,000 கோடியை எட்டியுள்ளது. இதில் 24 ஆயிரம் கோடி அமெரிக்காவிற்கு மட்டும் கடல் உணவு ஏற்றுமதி நடக்கிறது.
இந்த ஏற்றுமதி தென் மாவட்ட மன்னார் வளைகுடா பகுதியில் கிடைக்கும் கடல் உணவுகளை மீனவர்கள் இடமிருந்தும், vannamei bran என்ற வகை பண்ணை இறால் வளர்க்கும் விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படும் இறால் உள்ளிட்ட வகை கடல் உணவுகள் பதப்படுத்தப்பட்டு பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு நிறுவனத்திற்கு 1000 முதல் 1500 தொழிலாளர்கள் என்ற விதத்தில் 15 நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நான்கு நிறுவனங்களில் சுமார் 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு 50 சதவிகித வரி விதித்ததன் காரணமாகக் கடல் உணவு ஏற்றுமதி ஒரே இரவில் நின்றுவிடும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறால்களின் விலை அமெரிக்கச் சந்தையில் கூடுவதால் அமெரிக்காவில் இந்திய இறால்கள் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை கேன்சல் செய்கின்றனர். சமீபத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னர்கள் அமெரிக்காவிற்கு பாதி தூரம் சென்ற நிலையில் அந்த கண்டெய்னர்களை அனுப்ப வேண்டாம் அதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க இறக்குமதியாளர்கள் ஈ மெயில் அனுப்பியுள்ளனர்.
இதனை மீறி அமெரிக்காவிற்கு இறால் மீன்கள் வந்தால் அதை நாங்கள் இறக்குமதி செய்ய மாட்டோம். இல்லையென்றால் இறக்குமதி வரியை நீங்களே கட்டுங்கள் இல்லையென்றால் பாதி வழியிலேயே எல்லா கண்டெய்னர்களையும் திருப்பிக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்து விட்டனர். இதனால் சுமார் 500 டன் எடையில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான கண்டெய்னர்கள் திரும்பி தமிழகத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கு உடனான வர்த்தக உறவு ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 50 முதல் 60% தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். எனவே மத்திய மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட்டு 50 சதவீதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடல்வாழ் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியூஸ் 18 செய்திகளுக்காக தூத்துக்குடியில் இருந்து செய்தியாளர் முரளி கணேஷ்.
September 02, 2025 12:37 PM IST
அமெரிக்காவின் 50% வரியால் மீன் ஏற்றுமதி பாதிப்பு… கேள்விக்குறியான தொழிலாளர் வாழ்வாதாரம்…

