இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் மொழிப் பிரச்னை விவாதப்பொருளாகி விட்டது. அதற்குக் காரணம் அந்நாடு உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கோப்பில் கையெழுத்திட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஆங்கிலம் தொடர்புகளை நெறிப்படுத்துவது மட்டுமின்றி, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க இந்த நடவடிக்கை உதவும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு மொழி ரீதியாக உதவ நிதி வழங்கப்படும் என 2000 இல் அதிபராக இருந்த போது பில் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த ட்ரம்ப், “ஒரே மொழியில் குடிமக்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போது நாடு பலப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த போதே, 2021 இல் ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்றார் ட்ரம்ப். ஆனால் அந்நாட்டு காங்கிரஸ் சபையில் அது தோல்வியடைந்தது.
இந்தப் பிரச்னையை கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கையில் எடுத்த டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவுக்குள் ஏராளமான மொழிகள் வந்து கொண்டிருப்பதாகவும் இது நாட்டிற்கு நல்லது இல்லை” என்றும் கூறியிருந்தார். தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போலவே தற்போது அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்துள்ளது புலம்பெயர்ந்தவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சொகுசு வசதிகள் இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ்..
நாட்டின் 34 கோடி மக்கள் தொகையில் அதிகபட்சமாக 24 கோடியே 50 லட்சம் பேர் ஆங்கிலம் தான் பேசுகின்றனர். 160 பூர்வீக மொழிகள் உள்பட ஆங்கிலம் இல்லாத பிற மொழி பேசுபவர்கள், வெறும் 7 கோடி பேர் மட்டுமே. அதாவது, 10 இல் ஒரு வீட்டில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழி பேசும் சூழல் உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின்படி, அமெரிக்காவில் 50 க்கும் மேற்பட்ட மொழி பேசுபவர்கள் உள்ளனர். ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகிறது. சுமார் 4 கோடியே 20 லட்சம் பேர் இந்த மொழியைப் பேசுவதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்தப்படியாக பல்வேறு சீன மொழி பேசுவோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 40 ஆயிரமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் Tagalog, Vietnamese, அரபிக், பிரெஞ்ச், கொரியன், ரஷ்யன், Portuguese உள்ளிட்ட மொழி பேசுவோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். சுமார் 9 லட்சம் பேருடன் இந்தி 12 ஆம் இடத்தையும் சுமார் 4 லட்சம் பேருடன் தமிழ் 22 ஆம் இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேர் அமெரிக்க சைகை மொழியைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 30 க்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்கள் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்கனவே அறிவித்துள்ளன. அலாஸ்கா, ஹவாய் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஆங்கிலத்துடன் அப்பகுதி மக்களின் தாய்மொழியும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் போன்று உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழி உள்ளது. அதிகபட்சமாக பொலிவியா நாட்டுக்கு 37 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. 58 நாடுகளுக்கு ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. அதே சமயம் பிரிட்டன், ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்டவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி எதுவும் இல்லை.
March 03, 2025 7:53 AM IST

